ஈரோட்டை மீண்டும் தக்கவைப்பாரா மதிமுகவின் கணேசமூர்த்தி
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியின் மதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.பி அ.கணேசமூர்த்தி மீண்டும் களம் காண்கிறார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள குமாரவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் அ.கணேசமூர்த்தி.68 வயதாகும் கணேசமூர்த்தி, வைகோவின் தளபதிகளில் ஒருவர்.
திமுகவில் மாவட்டச் செயலாளராக இருந்த கணேசமூர்த்தி, திமுகவில் இருந்து வைகோ விலகி மதிமுகவைத் தொடங்கியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்த முதல் திமுக மாவட்டச் செயலாளர் ஆவார்.
வைகோவின் தளபதி
மதிமுக தொடங்கியது முதலே ஈரோடு மாவட்ட மதிமுக செயலாளராக இருந்து வருகிறார்.1898ம் ஆண்டு திமுக சார்பில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 ஆண்டுகளில் சட்டசபை கலைக்கப்பட்டதால் அவரது பதவிக்காலம் பாதியில் முடிந்தது.
பழனி எம்.பியாக வெற்றி
பின்னர் 1998ம் ஆண்டு பழனியில், மதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார். அதுவும் 13 மாதங்களில் லோக்சபா கலைக்கப்பட்டதால் முடிந்து போனது.
வைகோ உடன் சிறைவாசம்
2002ம் ஆண்டு மதுரை அருகே திருமங்கலத்தில் வைகோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி அவர் உள்ளிட்டோரை ஜெயலலிதா, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து உத்தரவிட்டார். அவர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். வைகோவுடன் சேர்ந்து கணேசமூர்த்தி உள்ளிட்டோரும் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்தனர்.
ஈரோடு எம்.பியாக வெற்றி
அதன்பின்னர் 2006 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெள்ளக்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சாமிநாதனிடம் தோல்வியை தழுவினார்.
2009ம் ஆண்டு ஈரோடு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் 15வது லோக்சபாவில் இடம் பெற்றார்.
மீண்டும் களமிறங்கும் கணேசமூர்த்தி
சிட்டிங் எம்.பியான கணேசமூர்த்தி மீண்டும் வேட்பாளராக களமிறங்குகிறார். தமிழகத்தில் ம.தி.மு.க. வசம் உள்ள ஒரே தொகுதியாக ஈரோடு உள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த மதிமுக இம்முறை பாஜக கூட்டணியில் களம் காண்கிறது. தொகுதியை தக்கவைப்பாரா கணேசமூர்த்தி.