தென்காசியை வெல்வாரா மதிமுகவின் மருத்துவர் சதன் திருமலைக்குமார்
தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியின் மதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் டாக்டர் சதன் திருமலைக்குமார்.
59 வயதாகும் மருத்துவரான சதன் திருமலைக்குமாரின் சொந்த ஊர் சிங்கிலிப்பட்டி. தந்தை திருமலையாண்டி, தாய் ஆவுடையம்மாள். சதன்திருமலைக்குமாரின் மனைவி குமாரி சந்திரகாந்தமும் ஒரு மருத்துவர். அவர்களுக்கு டாக்டர். தாய் விஜயரோகிணி, ஜெயந்தி பிரியதர்ஷினி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
சதன் திருமலைக்குமார் அரசியலுக்கு புதியவரல்ல. கடந்த 1991ம் ஆண்டு தென்காசியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தொடர்ந்து 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியிலும், 2001ல் சங்கரன்கோவிலிலும் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து 2006ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தபோது வாசுதேவநல்லூரில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2012ம் ஆண்டு சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
மதிமுகவில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உள்ள டாக்டர் சதன் திருமலைக்குமார் இம்முறை தென்காசி லோக்சபா தொகுதியில் களம் காண்கிறார். பாஜகவின் செல்லத் தொகுதியாக இருந்த இதனை போராடி பெற்றுள்ளது மதிமுக. சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி பெறுவாரா இந்த மருத்துவர்.