சிவந்தி ஆதித்தனார் முதல் ஆண்டு நினைவு நாள்: வைகோ புகழ் அஞ்சலி
சென்னை: பத்திரிகை துறையிலும், விளையாட்டுத் துறையிலும், ஆலயத் திருப்பணித் துறையிலும் சிவந்தி ஆதித்தனாரின்இடத்தை எவராலும் நிரப்ப முடியவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பத்திரிகை உலகின் சாதனையாளரும், விளையாட்டுத் துறைக்கு ஒளி தந்தவருமான கொடையால் உயர்ந்த மாமனிதர் ஐயா சிவந்தி ஆதித்தனார் கோடிக் கணக்கான மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்த நாள் இந்த நாளாகும்.
மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக நான் கொங்கு மண்டலத்தில் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது, உத்தமர் சிவந்தி ஆதித்தனாரின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்று, இரவோடு இரவாக காரில் பயணித்து தலைநகர் சென்னைக்கு வந்து அவரது பூத உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினேன்.
பத்திரிகை துறையிலும், விளையாட்டுத் துறையிலும், ஆலயத் திருப்பணித் துறையிலும் அப்பெரு மகனாரின் இடத்தை எவராலும் நிரப்ப முடியவில்லை.
தனது தந்தையார் வரையறுத்து அமைத்துத் தந்த பாதையில் தினத்தந்தி நாளிதழையும், கல்வித்துறை பணிகளையும் அவரது திருமகனார் பாலசுப்பிர மணிய ஆதித்தனார் செவ்வனம் நடத்தி வருகிறார்.
சிவந்தி ஆதித்தனார் வார்ப்பித்து உயர்த்திய தமிழக கைப்பந்தாட்டத் துறையை உலகளாவிய புகழ் அடையச் செய்வதே அன்னாரது முயற்சிகளுக்கும், கனவுகளுக்கும் சிறப்பு சேர்க்கும்.
பத்திரிகை துறை வரலாற்றில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் புகழும், சிவந்தி ஆதித்தனாரின் பெருமையும் என்றென்றும் காலமெல்லாம் நிலைத் திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.