மருந்துக்கடையடைப்பு போராட்டம்: மருந்து கிடைக்காமல் தவித்த மக்கள்
நெல்லை: ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதை கண்டித்து தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழகத்தில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வது தொடங்கப்பட்டு வருகிறது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அகில இந்திய மருத்துவ வணிகர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. போராட்டத்தையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மருந்துக்கடைகள் மூடப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் ஆயிரம் மருந்துக் கடைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 400 கடைகளும், குமரி மாவட்டத்திலும் அதே அளவு கடைகளும் நள்ளிரவு முதல் அடைக்கப்பட்டன. இந்த போராட்டத்தில் மருந்துக் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து சில நிர்வாகிகள் கூறுகையில்,
தென் மாவட்டங்களில் மருந்து விற்பனையாளர்கள் ஸ்டிரைக் முழு வீச்சில் நடந்தது. அனைவரும் கடைகளை அடைத்து முழு அளவில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆன்லைனில் மருந்துகளை வாங்கினால் அவற்றின் தரம் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. மேலும் அந்த மருந்து காலாவதியான மருந்தா என்பதையும் கண்டுபிடிக்க முடியாது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும். ஆனால் உள்ளூரிலேயே இந்த மருந்தை வாங்கினால் அது குறித்த விபரங்களை உடனடியாக பெற முடியும். மேலும் அருகிலேயே டாக்டர் இருப்பதால் அவர்களிடம் காண்பித்து மருந்து தரமானது தானா என்பதையும் கண்டறியலாம். ஆகவே இந்த ஆன்லைன் வாணிகத்தை உடனடியாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றனர்.