காஞ்சிபுரம் அருகே டிரைவரை தாக்கி மருந்து பெட்டிகளுடன் லாரி கடத்தல்.. மர்மநபர்கள் கைவரிசை
சுங்குவார்சத்திரத்தில் ஓட்டுநரை தாக்கி மினி லாரியை மர்மநபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
காஞ்சிபுரம்: ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு மருந்து பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மர்மநபர்களால் கடத்திச் செல்லப்பட்டது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் மலாடி பார்மசூட்டிக்கல் என்ற நிறுவனம் பல வருடமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சுவாச கேளாறு போன்ற வியாதிகளுக்கு மருந்து உற்பத்தி செய்து முகவர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
நேற்று மதியம் சென்னை ஆலந்தூரில் உள்ள அலுவலகத்திற்கு மினி கன்டெய்னர் மூலம் சரக்கு அனுப்பபட்டது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் துணையுடன் ஓட்டுநர் சேகர் லாரியை பாதுகாப்பாக ஓட்டி சென்றார்.
பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த லாரியை 6 பேர் கொண்ட கும்பல் மடக்கியது. அதிகாரிகள் சோதனையிடுவதற்காக நிறுத்துவதாக நினைத்த சேகர் லாரியை நிறுத்திய உடன் சட்டென வண்டியில் ஏறிய மர்ம நபர்கள் கத்தியை எடுத்து பாதுகாவலரை தாக்கியதில் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். அடுத்த வினாடியே மர்ம நபர்கள் லாரியை கடத்தி கொண்டு சென்றனர்.
பின்னர் சோகண்டி என்ற பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு அவர்கள் கொண்டுவந்த பொலீரோ காரில் மருந்து பொருட்களை ஏற்று கொண்டு தலைமறைவானர்கள். லாரியில் மலாடி நிறுவனத்தின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் 26 பேரல் மருந்துகள் கொள்ளை போனதாக ஓட்டுநர் சேகர் சுங்குவார்சத்திரமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐஜி. ஸ்ரீதர், டிஐஜி நஜ்மல் கோடா மற்றும் எஸ்பி சந்தோஷ்ஹிதாமணி ஆகியோர் மர்மநபர்களை குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.