தூக்கை ரத்து செய்ய கோரும் 14 பேரின் மனு மீது ஜன.2வது வாரத்தில் தீர்ப்பு- தலைமை நீதிபதி சதாசிவம்
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது:
சட்டத்தின் தற்போதைய வளர்ச்சி, மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்தும் இளம் வழக்கறிஞர்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். இன்றைய வழக்கறிஞர்கள் நாளைய நீதிபதிகள். எனவே வழக்கறிஞர்கள் சட்டம் பற்றி அனைத்து விவரங்களும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அண்மை காலங்களில் பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு, சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. பலாத்கார வழக்கில் குற்றவாளிகள், ஏற்கனவே சிறையில் இருந்த காலங்களையே தண்டனையாக கருதி அவர்களை விடுவிக்கும் வழக்கம் உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் உள்ளது.
ஆனால், அவ்வாறு குறைந்த தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றங்கள் வழங்கவேண்டும்.
நாடு முழுவதும் 14 தூக்கு தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. அவை தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்காகும். இந்த 14 வழக்குகளும் விசாரணை முடிந்து, அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தீர்ப்புகள் வழங்கப்படும்.
பொதுவாக ஒரு கொடூர வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர் அனுப்பும் கருணை மனுவை ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் பரிசீலிக்கும்போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்கிறார்கள். தண்டனையை குறைக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது.
அதே நேரம், கருணை மனுவை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலித்து முடிக்க வேண்டும் என்ற காலநிர்ணயம் உத்தரவாக இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றார்.