தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை: வைகோ வார்னிங்
சென்னை: மீத்தேன் ஆபத்தைத் தடுக்க தஞ்சையில், ஆகஸ்ட் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தின் காவிரி தீரத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது. இதற்காக ஒரு எனர்ஜி கார்பரேசனோடு மீத்தேன் எரிவாயு எடுக்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்து இருந்தது.
பூமிக்கு அடியில் எரிவாயு எடுப்பதற்காக மிகுந்த ஆழத்தில் குழாய்களைப் பதித்து, அதன்பின் வெள்ளமாகத் தண்ணீரில் ஆர்சனிக் உள்ளிட்ட 35 வேதியியல் பொருட்களை கலந்து, மிகுந்த வேகத்தோடு பூமியின் ஆழத்துக்குள் செலுத்தி மீத்தேன் எரிவாயு எடுக்கும் இந்தத் திட்டத்தால் நிலத்துக்குள் அதிர்வுகள் ஏற்பட்டு கட்டடங்கள் சேதமாகும்.
கடல் நீரான உப்பு நீர் நிலத்தடி நீரில் கலக்கும். விளைநிலங்கள் அடியோடு நாசமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழகத்தை வாழவைக்கும் காவிரி தீரம் பஞ்சப் பிரதேசமாகும்.
மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் ஏற்பட்ட சேதங்களை அனுபவபூர்வமாக அறிந்து, அதுவரை இயங்கிக்கொண்டிருந்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை அமெரிக்காவின் நியூயார்க் மாநில ஆளுநர் 2014 டிசம்பர் 17ம் தேதி அன்று அம்மாநிலம் முழுவதும் தடை விதித்துவிட்டார்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முனைந்ததால், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்ளிட்ட பொதுநலம் நாடுவோரும், விவசாய சங்கங்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் தொடக்கத்திலிருந்து இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து அறப்போராட்டங்கள் நடத்தினர்.
குறிப்பாக 2014 டிசம்பர் மாதத்திலும், 2015 ஜனவரி மாதத்திலும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மீத்தேன் திட்டம் குறித்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்த மூன்று மாவட்டங்களிலும் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டார். எண்ணற்ற கிராமங்களுக்கு நேரில் சென்று நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்தார்.
தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசு மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இந்த நிலையில் எனர்ஜி கார்பரேசன் குறித்த காலத்துக்குள் மீத்தேன் திட்டத்தைத் தொடங்கவில்லை, ஆதலால் ஒப்பந்தத்தை ரத்துச்செய்யப்போவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மீத்தேன் திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற மத்திய அரசு முனைந்துள்ளது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் 35 இடங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி தீர நன்செய் நிலங்கள் விவசாய சாகுபடிக்கு வழியில்லாமல் தரிசு நிலங்களாகும். அதன்பின்னர் இந்த நிலங்களை அடிமாட்டு விலைக்கு கார்பரேட் கம்பெனிகள் வாங்கிக்கொள்ளும். தமிழகத்தின் ஒரு பகுதி எத்தியோபியாவாக மாறும். இத்தகைய துயர ஆபத்து வராமல் தடுக்க மத்திய அரசினுடைய திட்டத்தை முறியடிக்க மக்களைத் திரட்டி அறப்போர் நடத்த வேண்டும்.
இதுகுறித்து அறப்போர் திட்டம் வகுக்க காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில், நீதிமன்றச் சாலையில் உள்ள சரோஜி இல்லத்தில், ஆகஸ்ட் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.