சென்னையில் திடீர் பள்ளத்தில் சிக்கிய கார், பேருந்து- இழப்பீடு வழங்க மெட்ரோ நிர்வாகம் ஒப்புதல்!
சென்னை அண்ணா சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார், பேருந்து சிக்கி சேதமடைந்ததால் அதற்கு உண்டான இழப்பீட்டுத் தொகையை வழங்க மெட்ரோ ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை அண்ணா சாலையில் இன்று திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அதில் கவிழ்ந்து சேதமடைந்த கார், மாநகர பேருந்துக்கு உண்டான இழப்பீடை வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அண்ணா சதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து ஒன்று அண்ணா சாலை சர்ச் பார்க் கான்வென்ட் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நின்றது. அப்போது பேருந்து பள்ளத்தில் இறங்குவதை உணர்ந்த டிரைவர் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்டார். அப்போது பேருந்து 10 அடி ஆழத்திலான பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பேருந்தை முந்த முயன்ற முகப்பேர் மருத்துவர் பிரதீப்புக்கு சொந்தமான காரும் அந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் காரும், பேருந்தும் கடுமையாக சேதமடைந்தது. இதற்கு உண்டான இழப்பீட்டை வழங்க மெட்ரோ நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தற்போது ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து டிஎம்எஸ் வரை மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவிக்கையில், மண் இளகியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். 44 கி.மீ. தொலைவில் உள்ள மெட்ரோ பணிகளில் 2 கி.மீ. தூரம் மட்டும் முடிக்க வேண்டியுள்ளது என்றார்.