மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் நோக்கமே பாழாகும்-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..
சென்னை : மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ், இளங்கோவன், வலியுறுத்தியுள்ளார்.
கட்டணத்தை குறைக்கவில்லை என்றால், மெட்ரோ ரெயில் திட்டம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே பாழாகிவிடும் என்று ஈ.வி.கே.எஸ். தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
''சென்னை மெட்ரோ ரெயில் கட்டணங்களை பார்க்கும் போது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10 கி.மீ. தூரத்திற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் ஆதர்ஷ் நகரில் இருந்து யமுனா நதி வரை உள்ள 17 கி.மீ. தூரத்திற்கு ரூ.19 தான் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணங்களைப் பார்க்கிற போது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தென்படுகிறது. இந்த கட்டணத்தை குறைக்கவில்லை என்றால், மெட்ரோ ரெயில் திட்டம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே பாழாகிவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
எனவே, சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் வெற்றிபெற வேண்டுமென்றால் உடனடியாக கட்டண குறைப்பு செய்யப்பட வேண்டும்''
இவ்வாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.