சென்னை மெட்ரோ ரயில் ஷெனாய்நகர் – திருமங்கலம் இடையே சுரங்கப்பணி நிறைவு!
சென்னை: சென்னையில் செஷனாய் நகர்- திருமங்கலம் இடையே சுரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரெயில் பணி 2007-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.14 ஆயிரத்து 600 கோடி திட்டமதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இதன் செலவு ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
மொத்தம் 45 கி.மீ
2 வழித்தடங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் பாதையின் மொத்த தூரம் 45 கிலோ மீட்டர்.
மார்ச்சில் ரயில் ஓடும்..
கோயம்பேடு-ஆலந்தூர் இடையே உயர்மட்ட ரயில் பாதை அமைக்கும் பணி முழுமை அடைந்துள்ளது. இதில் கடந்த சில மாதங்களாக பரிசோதனை ஓட்டம் நடைபெற்றது. வருகிற மார்ச் மாதம் இதில் போக்குவரத்து தொடங்குகிறது.
5 கட்ட பணி
சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணி 5 கட்டங்களாக நடந்து வருகிறது.
சுரங்கப் பணி நிறைவு
இதில் முதல் கட்டமாக ஷெனாய்நகர்- திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணி நேற்று காலை 11.30 மணிக்கு நிறைவடைந்தது. திருமங்கலம் ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் எந்திரம் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்தது. அப்போது அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இயக்குனர் பேட்டி
பின்னர் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 5 கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஒன்றான ஷெனாய்நகர்- திருமங்கலம் இடையே 4 கி.மீ தூரம் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.
2016-ல் மற்றொரு வழித்தடத்தில் ரயில்
இந்த சுரங்கப் பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதன் இடையே அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. 2016-ல் இந்த பாதையில் ரயில்கள் ஓடத்தொடங்கும்.
அனைத்து வழித்தடத்திலும்..
ஆலந்தூர்-பரங்கிமலை- சின்னமலை-விமான நிலையம் வழிதடத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் ஓடும். 2017-ம் ஆண்டிற்குள் அனைத்து வழிதடத்திலும் மெட்ரோ ரயில் ஓடும்.
இவ்வாறு ராமநாதன் கூறினார்.