தேர்தல் நேரத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்: மக்கள் கடும் அதிர்ச்சி
தஞ்சை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வாக்குப்பதிவு முடிந்த உடன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரத்திற்கு சென்ற அதிமுக வேட்பாளர்களை குடிநீர் பஞ்சத்தை தீர்க்காமல் வாக்கு கேட்டா வருகிறீர்கள் என்று கூறி மக்கள் அவர்களை விரட்டியடித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து மேட்டூர் அணையில் தண்ணீர் மிக குறைந்த அளவே இருந்த போதிலும் தேர்தலை முன்னிட்டும், வறட்சியை கருத்தில் கொண்டும் ஓரளவு தண்ணீர் தேவையை சரி செய்யும் பொருட்டு திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை என காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் ஓரளவு தண்ணீர் பிரச்சனை தீரூம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் முதல் காவிரியில் தண்ணீர் அளவு குறைந்தது. தற்போது தண்ணீர் வருகை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேட்டூர் அணை பொறியாளர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அணையில் மிக குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது. எனவே, தண்ணீர் மட்டும் உயரும் வரை பொறுத்துக் வேண்டுகோள் விடுத்தனர். இதில் இருந்து, வாக்கு வங்கியை குறி வைத்து திறக்கப்பட்ட மேட்டூர் அணை தண்ணீர் வாக்குப்பதிவு முடிந்த கையோடு மூடப்பட்டுள்ளது.