கொளுத்தும் வெயிலில் நடனமாடி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர்!
திண்டுக்கல்: தேர்தல் வந்தாலே ஊரெங்கும் திருவிழாக் கோலம்தான். அதுவும் முக்கியத்தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்தால் கேட்கவே வேண்டாம். தாரை தப்பட்டை... பேண்ட் வாத்தியம், வசதி படைத்தவர்கள் செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுப்பார்கள்.
திண்டுக்கல்லில் நேற்று பிரச்சாரத்திற்கு வந்த ஜெயலலிதாவிற்கு 3500 முளைப்பாரி எடுத்து வந்து மகளிர் அணியினர் வரவேற்பு கொடுத்தனர்.
இது ஒருபுறம் இருக்க கொளுத்தும் வெயிலில் கூட்டம் கலைந்து போகாமல் இருக்க ஆடலும், பாடலும் நிகழ்ச்சி வேறு நடைபெற்றது.
ரெக்கார்டு டான்ஸ்
வேர்க்க விறுவிறுக்க எம்.ஜி.ஆர் வேடமிட்டு கலைஞர்கள் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். வெயிலாவது ஒன்னாவது என் தலைவர் எப்படி ஆடுறார் பாரு... என்று உற்சாகமடைந்தனர் ரசிகர்கள்.
சாட்டையை சுழற்றிய எம்.ஜி.ஆர்
நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால் என்று எம்.ஜி.ஆரைப்போல சாட்டையை சுழற்றிக்கொண்டு ஆடிய அழகைப் பார்த்த ரசிகர்கள்... "தலைவா உன்னைய அடிச்சிக்க ஆள் இல்லை தலைவா"... என்று உற்சாகக் குரல் எழுப்பினர்.
இலவச குடம்
பிரச்சாரக்கூட்டத்தில் பேண்டு வாத்தியக்குழுவினர் வேறு தனி ஆவர்த்தனர் செய்ய... கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்களுக்கு இலவச குடம் வேறு வழங்கப்பட்டது. அதை பெண்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு வாங்கினர்.
வெயிலடிச்சாலும் தாங்குவோம்ல
வெயில் பட்டையை கிளப்பினாலும்... கொடுத்த காசுக்கு வஞ்சனையின்றி பெண்களும், ஆண்களும் கையில் பிளாஸ்டிக் இரட்டை இலையை ஏந்தி காத்திருந்ததுதான் பரிதாபமாக இருந்தது.
சிறுவர்களும் பிரச்சாரம்
இது ஒருபுறம் இருக்க திமுகவில் மு.க.ஸ்டாலினை வரவேற்க சிறுவர்களையும் கொடி பிடிக்க வைத்ததுதான் பரிதாபமாக இருந்தது. சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதையும் மீறி சிறுவர்கள் சிலரை கொடி ஏந்த வைத்திருந்தனர் திமுகவினர்.
தேர்தல் முடியுற வரைக்கும்...
பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. அதுவரை இதுபோன்ற சில சுவரஸ்யமான காட்சிகளை தமிழகம் முழுவதும் கண்டு ரசிக்கலாம்.