கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முக்கால் ஏக்கர் நிலம்.. அமைச்சர் பாண்டியராஜன் உறுதி
சென்னை: மதுரை கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொன் தமிழக நாகரீகம் தொடர்பான பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க முக்கால் ஏக்கர் நிலம் தரப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன் உறுதியளித்துள்ளதாக தமிழறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
மதுரை அருக உள்ளது கீழடி கிராமம். இங்கு சங்ககால தமிழர் வசிப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 4000 ஆண்டுகள் பழமையான தொல்லியல் பொருட்கள், பானை ஓட்டு எழுத்துகள் போன்றவை அங்கே கிடைத்து வருகின்றன. மத்திய அரசின் தொல்லியல் துறையினர் 1 ஏக்கர் பரப்பில் இதுவரை ஏறத்தாழ 5000 பொருட்களை எடுத்துள்ளனர்.
தமிழரின் தொன்மச் சான்றுகளாகவும், வரலாற்று அடையாளங்களாகவும் திகழும் அந்தப் பொருட்களை கர்நாடக மாநிலத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழர்களின் அரிய வரலாற்று ஆவணங்களாகத் திகழும் அந்தத் தொன்மச் சான்றுகளை, தமிழகத்தைத் தாண்டி, வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்றும், அவற்றை கீழடியிலேயே அருங்காட்சியம் அமைத்து, காட்சிக்கு வைக்கவேண்டும் என்றும் தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை எழுப்பிவருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியும் இதுதொடர்பாக தொடர்ந்து உரத்த குரல் எழுப்பி வருகிறார். இந்த நிலையில், தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலாளர் முனைவர் பா.இறையரசன் தலைமையில், வரலாற்று அறிஞர் கோ.கண்ணன், சாலினி, தொலைக்காட்சி செய்தேவன், நடிகரும் இயக்குநருமான யார் கண்ணன், இராசுகுமார் பழனிச்சாமி, ஆக்கம் மதிவாணன் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகம் சென்று, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வெங்கடேசன் மற்றும் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரைச் சந்தித்து மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.
அப்போது கல்வியமைச்சர் மாபா.பாண்டியராசன், இது சரியான கோரிக்கை என்று வழிமொழிந்ததோடு, அருங்காட்சியகத்துக்கு அரசு சார்பில் முக்கால் ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் இக்குழுவினர் மத்திய அரசின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மகேசுவரியைச் சந்தித்தும், கீழடி கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆவன செய்வதாக மகேசுவரி உறுதியளித்தார்.
மாநில கல்வி அமைச்சர் அளித்த உறுதிமொழியின்படி இடம் கிடைத்தால் அங்கு அருங்காட்சியகம் அமைத்து சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையை உலகம் காலாகாலத்துக்கு அறிய வாய்ப்பு கிடைக்கும்.