திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப.. வைரலாகும் திண்டுக்கல் சீனிவாசனின் "தப்புத் தாளங்கள்"!
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உளறல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து உளறி வருவது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சர்கள் நாள்தோறும் ஏதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களின் பேச்சு சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்யப்படுகிறது.
இதனாலேயே அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவு பிரபலமாகி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறுவதையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரது சர்ச்சைக்குரிய பேச்சுகளும், உளறல்களும்..
குண்டை தூக்கிப்போட்ட திண்டுக்கல்
ஜெயலலிதா மரண விவகாரத்தில் நாங்கள் பொய் சொன்னோம், ஜெயலலிதாவை நாங்கள் மருத்துவமனையில் பார்க்கவில்லை, ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை சட்னியும் சாப்பிடவில்லை என்று குண்டை தூக்கி போட்டு பிரபலமானார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெ. விவகாரத்தில் பொய் சொன்னதற்காக பகீரங்கமாக மன்னிப்பும் கேட்டார் அவர்.
மொக்கை வாங்கிய அமைச்சர்
சைவ உணவு சாப்பிட்டால் உடல் பருமனாகாது என்ற அவரது பேச்சால் அசைவ பிரியர்கள் வெகுடெழுந்தனர். கர்நாட பாடகி சுதா ரகுநாதனை சுதா ரங்கநாதன் என்றும் அவரை பரதநாட்டிய கலைஞர் என்றும் கூறி மொக்கை வாங்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
எம்ஜிஆர் குறித்து உளறல்
மேலும் தமிழ்நாட்டை தாண்டினால் எம்ஜிஆரை யாரேன்று தெரியாது என பேசி அதிமுகவினரிடமே வாங்கிக்கட்டிக்கொண்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பிரதமர் மோடியே எம்ஜிஆர் புகழந்து பேசியுள்ள நிலையில் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நான் மருத்துவர் இல்லை
திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சல் இல்லை என்றார். இதுகுறித்து கேட்டபோது நான் மருத்துவர் இல்லை எனக்கு காய்ச்சல் குறித்து எதுவும் தெரியாது என்றார். அமைச்சரின் இந்த பொறுப்பில்லாத பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன.
கெழவி என வசைப்பாடினார்
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீனிவாசன், மழையால் இருக்கையில் இருந்து எழுந்து மேடையோரம் ஒதுங்கிய மூதாட்டியை கெழவி என வசைப்பாடினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குழம்பி போயுள்ள அமைச்சர்
இந்நிலையில் பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என உளறியுள்ளார் அமைச்சர். பிரதமர் யார் என்று கூட தெரியாமல் அமைச்சர் குழம்பி போயுள்ளதாக சமூகவலைதளங்களில் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.