வர்த்தக பிரிவுக்கு டிராக்டர் மாற்றப்படாது.. ஸ்டாலினின் கடிதத்தை ஏற்று நிதின் கட்கரி உறுதி
வர்த்தக பிரிவுக்கு டிராக்டர் மாற்றப்படாது என்று மு.க.ஸ்டாலினின் கடிதத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
சென்னை: விவசாய வாகன பிரிவிலிருந்து வர்த்தக பிரிவுக்கு டிராக்டர் மாற்றப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரி உறுதிப்பட தெரிவித்தார்.
விவசாய வாகன பிரிவில் உள்ள டிராக்டர்கள், வர்த்தக பிரிவுக்கு மாற்றப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதற்கு விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது போல் மாற்றக் கூடாது என்று அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் திருச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளின் காலில் விழுந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் டிராக்டரை வர்த்தக பிரிவுக்கு மாற்றினால் ஜிஎஸ்டி வரி செலுத்த நேரிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
வர்த்தக பிரிவில் சேர்த்தால் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு அதன் விலை 10 முதல் 25 சதவீதம் வரை உயரக் கூடும். இதனால் உதிரிபாகங்களின் விலையும் உயரக் கூடும். ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் டிராக்டரை வர்த்தக பிரிவுக்கு மாற்றினால் மேலும் பாதிக்கப்படுவர்.
எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை திருச்சி சிவா எம்பி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கொடுத்தார். அதன் பேரில் விவசாய வாகன பிரிவில் இருந்து டிராக்டரை வர்த்தக பிரிவுக்கு மாற்றப்படாது என்று உறுதி அளித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.