எந்த நிபந்தனையும் இன்றி ஓபிஎஸிடம் பேச்சுவார்த்தை: அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்!
எந்த நிபந்தனையும் இன்றி ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக அம்மா அணியின் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை எந்த நிபந்தனையும் இன்றி ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக அம்மா அணியின் அமைச்சரான செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பன்னீர்செல்வம் கூறிய கருத்தை வற்வேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சி மற்றும் ஆட்சி அதிகாரம் சசிகலா குடும்பத்தினரின் கைக்கு சென்றது. இதையடுத்து முதல்வராக சசிகலா முயன்றதால் அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் தலைமையிலான ஒரு அணியாகவும் சசிகலா தலைமையிலான ஒரு அணியாகவும் செயல்பட்டுகிறது.
தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக்கூறி வரும் ஓபிஎஸ் அணி கட்சியின் அதிகாரம் சின்னம் உள்ளிட்டவற்றை தங்களுக்கே அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக அம்மா அணி இணைய வந்தால் எந்த நிபந்தனையும் இன்றி சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேற்று தெரிவித்தார்.
நேற்று ஆலோசனை
இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று அமைச்சர்கள் ஆலோசனை நடைபெற்றது. அப்போது இரு அணிகளும் இணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஓபிஎஸ்க்கு வரவேற்பு
இந்நிலையில் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறிய கருத்தை வரவேற்பதாகவும் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
தொண்டர்கள் விருப்பம்
இதனிடையே இன்று சென்னை போர்க்கப்பலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜு மீண்டும் பேசினார். அப்போது இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று அவர் கூறினார்.
இரட்டை இலை மீட்டெடுக்கப்படும்
கட்சி ஒன்றிணைய இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என அவர் கூறினார். இரு அணிகளும் ஒன்றிணைந்ததால் தான் இரட்டை இலை சின்னம் மீட்டெடுக்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.