அம்மாவை பார்க்கமுடியலை... கோவில் கோவிலாக யாகம் நடத்தும் அமைச்சர்கள்
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டியும், நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழவேண்டியும்,அமைச்சர்களும், அதிமுக தொண்டர்களும் தமிழகம் முழுவதும் பூஜை செய்து வருகின்றனர்.
சென்னை: முதல்வர் இருக்கும் இடமே தலைமைச் செயலகம் என்று அதிகாரிகளும், அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனையை சுற்றிவர, அம்மா இருக்கும் இடமே ஆலயம் என்று அப்பல்லோ வாசலில் குடியேறியிருக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினத்தில் இருந்தே சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு தினமும் வந்து வெளியில் பூசணிக்காய் உடைப்பது, தேங்காய் உடைப்பது, குங்குமபூஜை, குத்து விளக்கு பூஜை, மண்சோறு சாப்பிடுவது என்று என்று விதவிதமான பூஜைகள் செய்கிறார்கள்.
மருத்துவமனை வாசலில் சென்னை கூட்டம் சும்மா அள்ளுகிறது. இதில் வெளியூரில் இருந்து வேறு தொண்டர்கள் வந்தால் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். கூட்டத்தை கூட்டி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் உள்ள நிர்வாகிகள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் சொல்லிவிட்டதால் சொந்த ஊர்களிலேயே பூஜை, அன்னதானம் செய்து போட்டோ, வீடியோ எடுத்து அனுப்புகின்றனர்.
பறக்கும் அமைச்சர்கள்
அமைச்சர்கள் தினமும் மருத்துவமனைக்கு வந்தாலும், மாலையில் மதுரை, தூத்துக்குடி, கோவை செல்லும் விமானங்களை பிடித்து மறுநாள் காலை நடக்கும் பூஜைகளில் பங்கேற்கின்றனர். மறுநாள் காலையில் விமானத்தில் சென்னைக்கு திரும்புகின்றனர். அமைச்சர் தினமும் இரவில் சொந்த மாவட்டம் பகலில் சென்னை என வந்து போகின்றனர்.
1008 விளக்கு பூஜை
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டியும், நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழவேண்டியும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் ஷராப்பஜார் வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோவிலில் 1008 பெண்கள் விரதமிருந்து காமாட்சி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை செய்து கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில் அமைச்சர் சேவூர். எஸ். இராமசந்திரன் தலைமையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
துர்க்கைக்கு ராகுகால பூஜை
ஜெயலலிதா பூரண நலமுடன் நீடூழி வாழ வேண்டி கழக இலக்கிய அணி சார்பில் அசோக் நகர் மல்லிகேஸ்வரர் கோவிலில் 216 பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி
விஷ்ணு துர்க்கை ராகு கால பூஜை இலக்கிய அணி மாநில செயலாளர் பா.வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கே.டி.ராஜேந்திரபாலாஜி பால்குடம்
ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி, இன்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் 23 ஆயிரம் பேல் பால்குடம் எடுத்தனர். சிவகாசி பேருந்து நிலையம் அருகில் இருந்து, பத்திரகாளியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.
கரூரில் யாகம்
கரூர் பசுபதீஸ்வரரன் கோயிலில் முதல்வர் குணமடைய வேண்டி மாவட்ட அ.தி.மு.க சார்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் பங்கேற்றார். ஜெயலலிதா குணமாகி விடு திரும்பும் வரை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் தொடரும் என்பது நிச்சயம்.