கட்சத்தீவை மீட்பதுதான் பிரச்சனைக்குத் தீர்வாம். மீனவர்களை சந்தித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் போராடி வரும் மீனவர்களை அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு என ஜெயக்குமார் கூறினார்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், இலங்கை அரசைக் கண்டித்து போராடி வரும் மீனவர்களையும், உயிரிழந்த பிரிட்ஜோவின் குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூற அமைச்சர்கள் தங்கச்சிமடம் வந்தனர்.
இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற இளைஞர் மரணமடைந்தார்.மேலும் சாரோன் என்பவர் காயமடைந்தார். அதையடுத்து, இலங்கை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மீனவர்கள் தங்கச்சிமடத்தில் போராடி வருகின்றனர்.
மீனவர்கள், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்படும் வரை மரணமடைந்த பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அமைச்சர்களிடம் 7 அம்ச கோரிக்கையை மீனவப் பிரதிநிதிகள் கொடுத்தனர். இதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாகவும், கச்சத்தீவை மீட்பதே இந்த பிரச்சனை தீர வழி எனவும் கூறினார்.
மேலும், அதிமுக எம்.பிக்கள் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள் எனவும் 1980லிருந்து 2016 வரை 250 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என கூறினார். மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்போம் என கூறினார்.