மிஸ் கூவாகத்தின் நியாயமான ஆசை...நிறைவேற்றி வாய்ப்பாளிப்பார்களா முன்னணி நடிகைகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த ஆன்ட்ரியா சென் மிஸ் கூவாகமாக தேர்ந்தடுக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் : கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் போது மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த திருநங்கை ஆன்ட்ரியா சென் முன்னணி நடிகைக்கு வடிவமைப்பாளராவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கூவாத்துரில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான திருநங்கைகள் ஒன்று கூடுவர். இந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெறும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மிஸ் கூவாகம் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள் மணப்பெண் போல பாரம்பரிய பட்டுப்புடவையில் நகை அலங்காரம் செய்து கொண்டு மேடையில் ஒய்யார நடை போட்டு சென்றனர்.
மிஸ் கூவாகம் 2017 போட்டியில் முதல் இடத்தை சென்னையை சேர்ந்த திருநங்கை ஆன்ட்ரியா சென்னும், 2ம் இடத்தை சேலத்தை சேர்ந்த கவியும் தட்டிச் சென்றனர். போட்டியில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திருநங்கை ஆன்ட்ரியா சென், முன்னணி நடிகைகளுக்கு வடிவமைப்பாளராக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆன்ட்ரியா சென், வெளிநாட்டில் நடக்கும் திருநங்கைகளுக்கான போட்டியில் பங்கேற்க உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.