முதல் முறையாக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்! அதிருப்தியில் கருணாநிதி!!
சென்னை: திமுக வரலாற்றில் முதல் முறையாக இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு அக்கட்சிப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினின் இந்த வாழ்த்து செய்தியால் திமுக தலைவர் கருணாநிதி கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது,
திமுகவைப் பொறுத்தவரை கடவுள் மறுப்பு என்ற நாத்திகம் அதன் கொள்கை அல்ல. பேரறிஞர் அண்ணா காலத்திலேயே 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
பின்னாளில் கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற சிறுபான்மையின மக்களின் விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதை திமுக கடமையாக கொண்டிருந்தது. அதே நேரத்தில் இந்துக்கள் கொண்டாடும் எந்த ஒரு பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வதில்லை என்ற நிலையில் திமுக இருந்தது.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
இந்த நிலையில் புதிய திருப்பமாக, திமுக வரலாற்றில் முதல் முறையாக 'விநாயகர் சதுர்த்தி' அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் "Greetings to all on the occasion of Vinayaka Chaturthi!" என்று நேற்று பதிவிட்டுள்ளார்.
கருணாநிதி கோபம்
ஸ்டாலினின் இந்த வாழ்த்து குறித்து கேள்விப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடும் கோபத்தில் இருந்ததாக கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவினர் வரவேற்பு
ஸ்டாலினின் இந்த வாழ்த்து செய்தி திமுகவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பதிவிட்டிருக்கும் திமுகவினர் சிலர், ஸ்டாலினின் வாழ்த்து முயற்சியை வரவேற்றுள்ளனர்.
விமர்சனமும் உண்டு
அதே நேரத்தில் பெரியார் இயக்கத்தினர் பலரும் ஸ்டாலினின் இந்த வாழ்த்து செய்தியை விமர்சித்திருக்கின்றனர்.