வாக்காளர்களுக்கு லஞ்சம்-செங்கோட்டையன் உள்பட 7 அமைச்ச்சர்களிடம் சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
பணப்பட்டுவாடா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட 7 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 7 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் புதன்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஆர்.கே.நகர் சிக்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை.துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள், அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு ரூ.85 கோடி பணம் விநியோகிக்கும் ஆவணங்கள் சிக்கின.
இதனிடையே ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பேசுகையில், வாக்காளர்களுக்கு பணம் தந்தது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இது போதாது. பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 7 பேரையும் கைது செய்து சிபிஐ விசாரணை வளையத்தில் கொண்டு வரவேண்டும். மேலும் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கி தமிழகத்தை மற்ற மாநிலங்களின் முன்பு அசிங்கப்படுத்திவிட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் ஸ்டாலின்.