ஏழைகளைச் சந்திக்காதவர் ஜெயலலிதா - மு.க.ஸ்டாலின் தாக்கு
நாகர்கோவில்: முதல்வர் ஜெயலலிதா ஏழைகளைச் சந்திக்க கிராமம் கிராமமாக செல்ல மாட்டார் என்று குமரியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இன்று தனது பிரச்சாரத்தை துவக்கினார். அவர் விளவங்கோடு தொகுதி களியக்காவிளை என்ற இடத்தில் இருந்து பிரச்சாரத்தை துவங்கினார்.
அங்கு அவர் திமுக வேட்பாளர் ராஜரத்தினத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது...
ஜெயலலிதா வருகிறார் என்றால் பக்கத்து மாவட்டத்து அ.தி.மு.க.வினரை கூட்டி வந்து திடலிலே பேசிவிட்டு கிளம்பி சென்று விடுவார் எங்களை போல் ஏழை எளிய மக்களை கிராமம் கிராமமாக சந்திக்கமாட்டார். ஜெயலலிதா ஆட்சியிலேயே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு படும் பாடு பற்றி குறிப்பாக சொல்ல வேண்டுமானால்
15.10.2013 அன்று கருங்கல் அருகே வீடு புகுந்து இரட்டை கொலை நடந்துள்ளது.
அதேபோல் 14.10.2013 அன்று குடிப்பதற்காக பணம் தரவில்லை என்று தந்தையே மகனை அடித்துக் கொன்ற கொடூரம் இந்த ஆட்சியில் தான் நடந்துள்ளது.
31.12.2013ல் தண்ணீர் எடுக்கச் சென்ற பாரத பள்ளி மாணவி ஜீகிதாவின் சங்கிலி பறிப்பும் நடந்துள்ளன. எந்த மேடையிலும் பிஜேபியை பற்றி ஜெயலலிதா எதிர்த்து பேசவில்லை. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு சதி செய்கிறார்கள். அந்த சதி தேர்தலுக்கு பின் வெட்ட வெளிச்சத்துக்கு வரும்.
,நீங்கள் அனைவரும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் எப்.எம்.ஆர் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.
களியக்காவிளையை அடுத்து அவர் குழித்துறை, மார்த்தாண்டம், கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எட்டணி, கருங்கல், பாலப்பள்ளம், குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட குளச்சல், திங்கள்சந்தை, பத்மனாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட திருவிதாங்கோடு, அழகிய மண்டபம், தக்கலை ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
இது தவிர இன்று மாலை 7 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திடலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகிறார்.