சட்டசபையை கூட்டுங்கள்: சபாநாயகர் தனபாலை சந்தித்து ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறும் வகையில் சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சபாநாயகர் தனபாலை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.
திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, சுதர்சனம். மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தமிழக சபாநாயகர் ப.தனபாலை தலைமை செயலகத்தில் புதன்கிழமை சந்தித்து பேசினர்.

அப்பொழுது ஸ்டாலின் தரப்பில் ஒரு கடிதம், திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஒரு கடிதம் என இரண்டு கடிதங்கள் தனபாலிடம் அளிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக அரசின் 2017-18-ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் மீதான பொது விவாதம் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு நடைபெறாமல் உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் கோரப்பெறும் தொகை தொடர்பான மானிய கோரிக்கை, அதில் உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் வெட்டு தீர்மானங்கள் போன்ற சட்டமன்ற உரிமைகளை, எம்.எல்.ஏ.க்கள் ஆற்ற இயலாதபடி சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதம் தள்ளி போடப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளாகவே வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்தவுடன் மானிய கோரிக்கைகள் விவாதத்தை நடத்தாமல், அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டமன்ற ஜனநாயகத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி வருகிறது. எனவே, மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறும் வகையில் சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும்.
சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில் மானிய கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்புக்கு வகை செய்யும் விதத்தில் உடனடியாக சட்டப்பேரவையின் கூட்டத்தை கூட்டி, 2017-18-ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்துக்கு இறுதி வடிவம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications