பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு திமுக பக்கபலமாக இருக்கும்... கன்னியாகுமரியில் மு.க.ஸ்டாலின் உறுதி
ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு திமுக எப்போதும் பக்கபலமாக இருக்கும் என்று கன்னியாகுமரியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கன்னியாகுமரி: ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு திமுக எப்போதும் பக்கபலமாக இருக்கும் என்றும் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தால் இத்தகைய சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தென் தமிழகத்தை ஓகி புயல் தாக்கியது. இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி , நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின.
இன்னும் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனிடையே குமரி கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் சிலர் இன்னும் கரை சேரவில்லை.
இதனால் அவர்களை கண்டுபிடித்து தர கோரி நீரோடி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் மாயமான மீனவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் முக ஸ்டாலின் கூறுகையில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு திமுக பக்கபலமாக இருக்கும்.
புயலுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகள் நடவிடிக்கை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.