நதிநீர் இணைப்பை விரைவுபடுத்த வலியுறுத்தி மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
நதி நீர் இணைப்பில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமருக்கு முக ஸ்டாலின் கடிம் எழுதியுள்ளார்.
சென்னை: நதிகளை இணைப்பதில் கவனம் செலுத்தி அந்த பணிகளை அதிவேகமாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமருக்கு முக ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடியின் போது காவிரி நதி நீரை விவசாயிகள் எதிர்பார்ப்பதும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கர்நாடகா அரசு தண்ணீர் விட மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இதுபோதாக்குறைக்கு கேரளா அரசும், ஆந்திரா அரசும் முல்லை பெரியாறு மற்றும் பாலாற்றின் மீது தடுப்பணை கட்டுவது உள்ளிட்டவை நடைபெற்று வருவதால் நதி நீர் இணைப்புதான் இதற்கு உன்னத தீர்வு என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கான பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை.
தமிழக விவசாயிகள் வறட்சி காரணமாக கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் மத்திய அரசு அவர்களுக்கு வறட்சி நிவாரணத்தை சரிவர வழங்கவில்லை. பயிர்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41 நாள்கள் போராடினர். எனினும் பலனில்லை.
இந்நிலையில் நதி நீர் இணைப்பு தொடர்பாக பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நதி நீர் இணைப்புத் திட்டங்களில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக நதி நீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்ற வேண்டும்.
நதி நீர் இணைப்பு மாநிலங்கள் இடையேயான நதி நீர்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். நதிகள் இணைப்பால் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறுவர் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.