இரட்டை விரலை காட்டி சர்ச்சையில் சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ்
கரூர்: கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.ஏல்.ஏ. கமராஜ் வாக்களிக்கும் போது இரட்டை விரலை காட்டி வாக்களித்தாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கரூர், வையாபுரி நகரில் உள்ள கொங்கு உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

அப்போது அவர் தனது கட்சி சின்னமான இரட்டை இலையை பிரதிபளிக்கும் விதமாக இரட்டை விரலை காட்டியதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் குறித்து திமுக முக்கிய நிர்வாகிகள் அந்த பூத் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அனைத்து தகவல்களையும் முழு விவரங்கள் மற்றும் புகைப்படத்துடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சர்சைக்குரிய சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவாளர்களிடம் விளக்கம் கேட்ட போது, இரட்டை விரலை காட்டுவது வெற்றியை குறிக்கும் அடையாளம் ஆகும். வட மாநிலங்களில் இன்றும் பல தலைவர்கள் வாக்குப்பதிவின் போது, இரட்டை விரலை காட்டுவது பல பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளது. இது தேர்தல் அதிகாரிகள் பலருக்கும் நன்கு தெரியும்.
மேலும், அதிமுகவின் சின்னம் இரட்டை இலை. இரண்டு விரல்கள் அல்ல. அப்படி இருக்க திமுகவினர் வேண்டும் என்றே காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் நேரில் சென்று விளக்கம் அளிக்க தயாராகவே உள்ளோம் என்கிறனர்.
முதன்முறையாக தமிழக சட்டமன்றத்திற்கு காலடி எடுத்த வைத்த இந்த எம்.எல்.ஏ. காமராஜ், தனது முதல் மாத சம்பளம் முதல் கடந்த இரண்டு வருடத்திற்கு மேல் இன்று வரை கட்சி, மதம், ஜாதி பாகுபாடு இன்றி ஏழை, எளிய மக்களை தேடி போய் கொடுத்து வருகின்றார் என்ற நல்ல பெயர் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட இவர் இப்படிப் போய் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டாரே என நடுநிலை அரசியல்வாதிகள் கமெண்ட் அடிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications