எங்களை மட்டும் ஏன் விடமாட்றீங்க? ரிசார்ட் 'சிறையில்' இருக்கும் மாஜி எம்எல்ஏக்கள் கதறல்!
குடகு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் தங்களை வீட்டிற்கு செல்ல அனுமதி அளிக்குமாறு டிடிவி தினகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
சென்னை: குடகு விடுதியில் தங்கியுள்ள பதவிபறிபோன எம்எல்ஏக்களை தங்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டிடிவி தினகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் புதுச்சேரியில் தங்கியிருந்தனர். செப்டம்பர் 7ம் தேதி எம்எல்ஏக்கள் பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் இருந்து கர்நாடக மாநிலம் குடகில் உள்ள பேடிங்டன் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
20 நாட்களுக்கும் மேலாக அவர்கள் அங்கு தங்கியுள்ளனர். இதனிடையே 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 4ம் தேதி விசாரணை நடக்கிறது.
சென்னையில் தினகரன் சந்திப்பு
செப்டம்பர் 20ம் தேதியே குடகு விடுதியில் இருந்து கிளம்புவதாக தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கூறியிருந்த நிலையில் குடகில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர் 16 எம்எல்ஏக்களும். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, முத்தையா, சபாபதி உள்ளிட்டோர் தினகரனை இன்று சென்னையில் நேரில் சந்தித்தனர்.
ஆதரவை வாபஸ் பெற மாட்டோம்
தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, வெற்றிவேல் உள்ளிட்டோர் சுதந்திரமாக வெளியில் சென்று வருவது போல தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தினகரனிடம் அவர்கள் கோரியுள்ளனர். மேலும் எந்தச் சூழ்நிலை வந்தாலும் தினகரன் தரப்பிற்கான ஆதவை பின்வாங்க மாட்டோம் என்றும் பொதுநிகழ்ச்சிக்கோ, தொகுதி பிரச்னைகளையோ பார்க்காமல் இருந்தால் மரியாதை போய்விடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அணி தாவும் அச்சம்
எம்எல்ஏக்கள் பழனிசாமி அணிக்கு தாவிவிடுவார்களோ என்று தினகரன் தரப்பு அஞ்சுவதாக தெரிகிறது. இந்நிலையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து தினகரன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
ஜக்கையன் மாறினார்
நீதிமன்ற தீர்ப்பிற்காக தினகரன் தரப்பு காத்திருக்கும் நிலையில், எம்எல்ஏக்கள் இது போன்று திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளது தினகரன் தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜக்கையன் அணி மாறியது போல இவர்களும் மாறி விடுவார்களோ என்ற அச்சமும் தினகரனுக்கு இருப்பதாக தெரிகிறது.