37–வது சென்னை புத்தக கண்காட்சி நாளை தொடங்குகிறது!
சென்னை: 37-வது சென்னை புத்தக விற்பனை கண்காட்சி நாளை தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் கே.எஸ்.புகழேந்தி, பொருளாளர் ஜி.ஒளிவண்ணன் ஆகியோர் கூட்டாக சென்னையில் நேற்று கூறியதாவது:
37-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நாளை தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. வழக்கமான நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் கண்காட்சி நடைபெறும்.
777 அரங்குகள்
கண்காட்சிக்காக சுமார் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் 777 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் பதிப்பாளர்களுக்காக 435 அரங்குகளும், ஆங்கில பதிப்பாளர்களுக்காக 263 அரங்குகளும், ஊடக பதிப்பாளர்களுக்காக 59 அரங்குகளும், 20 புரவலர் மற்றும் இதர அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் 5 லட்சம் தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இடம் பெறும். இதில் 3 ஆயிரம் தலைப்புகள் கீழ் புத்தகங்கள் இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
மாலை நிகழ்ச்சிகள்
புத்தகக் கண்காட்சி நடைபெறும் 13 நாட்களிலும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் இலக்கிய சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளது.மாலை 4 மணி முதல் 6 மணி வரை பதிப்பாளர்களின் நூல் வெளியிட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாணவர்களின் கற்பனை திறனை வளர்க்கும் வகையில் ஓவியப்போட்டி, பேச்சுபோட்டி, கட்டுரை போட்டிகளும் நடக்கிறது.இந்த ஆண்டுமுதல் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியும் நடைபெற உள்ளது.
புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்களிடையே மனிதநேயத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ரத்த தான முகாம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
முதியோர்கள் கண்காட்சி அரங்குக்கு சுலபமாக வந்து செல்ல நுழைவுவாயிலில் இருந்து இலவச வாகன வசதியும் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் அரங்கை எளிதில் சுற்றிப்பார்க்க இரு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு புத்தக கண்காட்சியின் அடுத்தடுத்து நிகழ்வுகள் குறித்து செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் முறையும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு ரூ.10 அனுமதி கட்டணம் வசூலிக்கப்படும்.
22-ந்தேதி மாலை நடைபெறும் நிறைவுநாள் நிகழ்ச்சியில், பதிப்புத்துறை, புத்தக விற்பனைத்துறையில் 25 ஆண்டுகள் பணி செய்த பபாசி உறுப்பினர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுகளும், பரிசும் வழங்கப்படும். கண்காட்சி தொடக்க விழா நாளை மாலை 5 மணியளவில் நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
37-வது சென்னை புத்தக கண்காட்சி சின்னமும் நேற்று வெளியிடப்பட்டது.