'ஒன்இந்தியா தமிழ்' வெளியிட்ட செய்திக்கு, சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி விளக்கம்!
சென்னை: சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளி குறித்து நமது 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியை அப்பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சித்தார்கோட்டையிலுள்ள முகமதியா மேல்நிலைப் பள்ளி, தாளாளர் ஹாஜி.எம்.சாகுல் ஹமீது கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சித்தார்கோட்டையில் 1905ம் ஆண்டு ஆரம்பப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு கல்விச் சேவையில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட முகம்மதியா மேல்நிலைப்பள்ளி இப்பகுதியின் அனைத்து சமுதாய மக்களுக்கும் சிறந்த கல்வியை அளித்து வருகிறது. அரசுப் பொதுத் தேர்வுகளில் நல்ல தேர்ச்சியும் பெற்று வருகிறது.
மாணவ, மாணவியர்களுக்கு நல் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அளிக்கப்படுகிறது. எங்கள் பள்ளி சித்தார்கோட்டை முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இப்பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்கள் ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தங்களால் வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். மேலும், எம் பள்ளியின் முகப்பு மற்றும் கட்டிடங்களின் வீடியோ படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இச் செய்தி வெளியிடப்படுவதற்கு முன்பு இச்செய்தி சார்பான உண்மைத் தன்மையை எம்பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டறியாமல் செய்தி வெளியிட்டதும் தவறான செயலாகும். இச் செய்தி வெளியீட்டின் காரணமாக, பள்ளியின் நற்பெயருக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இச் செய்தி தவறாக வெளியிடப்பட்டதற்கு மறுப்பு செய்தியினை தங்கள் ஊடகம் வாயிலாக வெளியிடுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.