ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு தரப்பட்ட பணம் ஒயிட்டா? பிளாக்கா? ப.சிதம்பரம் 'சுளீர்'
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக தரப்பட்ட பணம் கருப்பு பணமா அல்லது சட்டரீதியான பணமா என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக தரப்பட்ட பணம் முறையாக சம்பாதித்த பணமா? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமானா ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடி ரெய்டு நடத்தினர்.
இதில் ரூ.89 கோடி வரை ஆர்.கே. நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது.
இதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும், சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவும் நேற்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியுடன் ஆலோசனை நடத்தினர்.
We were told demonetisation has put an end to black money. Was money distributed in R K NAGAR white money?
— P. Chidambaram (@PChidambaram_IN) April 10, 2017
இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் தெரிவிக்கையில், ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் முறையான பணமா? பணமதிப்பிழப்பு செய்வதன் மூலம் கருப்பு பணத்தை ஒழித்து விடலாம் என்று மத்திய அரசு கூறியதே, தற்போது என்ன ஆயிற்று? என்று கேள்வி எழுப்பினார்.