ஷாக்கிங்: பணத்தை திருப்பி கேட்கும் அரசியல் புள்ளிகள்.. வீட்டை பூட்டிவிட்டு ஆர்.கே.நகர் மக்கள் ஓட்டம்
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் அரசியல் கட்சியினரும், விஐபி சுயேட்சை வேட்பாளரும் பணத்தை வாரி இறைத்து வாக்கு சேகரித்ததாக புகார்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தால் ஒரு அளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் தேர்தலை ரத்து செய்தால் அது வெளிப்படையாக தோல்வியை ஒப்புக்கொண்டதாகிவிடும் என நினைத்த அதிகாரிகள் 'எப்படியோ போங்க' என்பதை போல தேர்தலை நடத்தி முடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பணம் கொடுத்தபோது, எங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுவல்லவா சத்திய சோதனை
சத்தியத்தை மீறக்கூடாதே என்ற தமிழக மக்களின் மாண்பு (!) வாக்குச்சாவடிகளை நோக்கி கூட்டம் கூட்டமாக அவர்களை உந்தி தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனால்தான் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது ஆர்.கே.நகர்.

மையை காட்டு
வாக்களித்துவிட்டு கையில் பூசப்பட்ட மையை காண்பிக்க வேண்டும், அல்லது பணம் திரும்ப வாங்கிக்கொள்ளப்படும் என்று இலை கட்சியும், விஐபி சுயேட்சை வேட்பாளரும் கூறியிருந்தார்களாம். இங்குதான் சிக்கல் எழுந்துள்ளது.

வாக்களிக்க முடியாத தொழிலாளர்கள்
வேறு ஏரியாக்களுக்கு கூலி வேலைக்கு சென்ற சில தொழிலாளர்கள் 4 மணிக்கு மேல் ஆர்.கே.நகர் திரும்பியுள்ளனர். அவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதற்குள் வாக்குப்பதிவு நேரம் முடிந்துவிட்டது. இதனால் அவர்கள் வாக்களிக்க முடியவில்லை. இவர்களும் வாக்களித்திருந்தால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருக்குமாம்.

விடாத வேட்டை
இரவு வீடு வீடாக கையில் மை உள்ளதா என தேடிப்போயுள்ளனர், பணம் கொடுத்த புள்ளிகள். மை இல்லாதவர்களிடம், ஒவ்வொரு ஓட்டுக்கும் கை நீட்டி வாங்கிய ரூ.6000, ரூ.8000 வரையிலான பணத்தை திருப்பி தரும்படி கறாராக கூறியுள்ளனர் அந்த புள்ளிகள். பணம் இல்லை என்று சொன்னவர்களை அடுத்த நாளுக்குள் பணத்தை திருப்பி தர வேண்டும் என மிரட்டி சென்றுள்ளனர்.

வீடுகளுக்கு பூட்டு
மிரட்டலுக்கு பயந்துபோன வாக்களிக்காத வாக்காள பெருங்குடி மக்களில் பலரும் இன்று வீட்டை பூட்டிவிட்டு சொந்தக்காரர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளார்களாம். இதனால் கணிசமான வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தங்களை மறந்துவிடுவார்கள், அப்போது ஏரியாவுக்கு திரும்பலாம் என அவர்கள் தலைமறைவாக உள்ளதாக ஆர்.கே.நகர் கள நிலவரம் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications