நல்ல செய்தி.. சென்னையில் இன்று முதல் ஜில்லுன்னு பெய்யப் போகுது தென்மேற்கு பருவமழை !
சென்னை: சென்னையில் இன்று முதல் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். அதைதொடர்ந்து இந்த மழை தமிழகத்தின் தென் பகுதிகளிலும் பெய்ய தொடங்கும். ஆனால் இந்த முறை மே மாதம் 30ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப கேரளாவில் மழை பொழியத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தமிழகம், கர்நாடகம், ஆந்திர உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை வெயில் வாட்டி வந்த நிலையில் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கடும் வெயிலின் தாக்கத்துக்கு இடையில் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் திருவாரூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்று வட்டாரப்பகுதிகளில் நல்ல மழை கொட்டியது. மதுரையை அடுத்த மேலூர், கிடாரிபட்டி, தனியாமங்கலம், கீழையூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.