கொட்டிப் போய் குட்டையான குஷ்பு முடி.. விளம்பரத்தால் வந்த வினை!
சென்னை: "என்னடா தம்பி இப்படி முடி கொட்டிப்போயி தலை எல்லாம் சொட்டையாப் போச்சே... போய் அந்த எருமை மாட்டை புடிச்சு தேயி முடி வளரும்..."
"ஐயோ பாட்டி... அது எருமை மாடு இல்லை எர்வாமாட்டின்..."
இது வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஜோக்தான் என்றாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்.
இன்றைய காலத்தில் எதற்கெடுத்தாலும் விளம்பரம் என்றாகி விட்டது. அதுவும் பிரபல நடிகையோ, நடிகரோ சொன்னால்தான் செல்லுபடியாகிறது. சில நடிகர், நடிகையர்கள் மனிதாபிமானத்தோடு விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாலும், நாங்கதான் வாங்குற சம்பளத்துக்கு வரி கட்டுறோமே... பொருள் நல்லதா கெட்டதா என்பதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கிறது என்று பொறுப்பு கெட்டத்தனமாக பேசும் சில கத்துக்குட்டி நடிகர்களும் இருக்கதான் செய்கின்றனர்.
சரி அதை விடுங்க நம்ம விசயத்துக்கு வருவோம்... ஈமு கோழியில வளர்த்தா தங்க முட்டை போடும்னு சொன்னதை நம்பி கோடி கோடியா கொட்டியவர்கள் இருக்கின்றனர். அதுவும் ஒரு காலத்தில் பல்லை இளித்தது. அதுக்கு காரணம் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள்தான் என்று சொன்னார்கள்.
இப்போது மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிக்கொண்டிருக்கின்றனர். பல்பொடி விளம்பரமோ, தேங்காய் எண்ணெயோ, சப்பாத்தி மாவோ எல்லாருக்குமே தங்களின் அபிமான நடிகையோ, நடிகரோ உபயோகிக்கும் பொருளாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். எனவேதான் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக்கொடுத்து விளம்பரத்தில் சினிமா நட்சத்திரங்களை நடிக்க வைக்கின்றனர். விளைவு அந்த பணத்தை பொருளின் மீது வைத்து மக்களின் தலையில் கட்டி விடுகின்றனர்.
கோடியை கொட்டிக்கொடுத்தும் வேஷ்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்த ராஜ்கிரனைப்போலவும், குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்ட சிவகார்த்திக்கேயனைப் போலவும் எத்தனை பேர் மக்களைப் பற்றி யோசிப்பார்கள் என்று தெரியவில்லை.
குஷ்புவும் விளம்பரங்களும்
பிரபல நடிகை குஷ்பு சில வருடங்களுக்கு முன்புவரை விளம்பரப்படங்களில் நடித்து வந்தவர்தான். சமீபகாலமாக விளம்பரங்களில் அவரை காண முடிவதில்லை. அதற்கான காரணத்தை தான் எழுதியுள்ள கட்டுரையில் அவரே சொல்லியிருக்கிறார்.
நடிக்க ஆர்வமில்லை
"விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு நான் ஆர்வம் காட்டுவதில்லை. ஆரம்ப காலங்களில் ஷேம்பு, ஹேர்ஆயில், பருப்பு வகை விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். இத்தனைக்கும் அவைகள் தரமானவை தான் என சிலர் ரெகமண்ட் செய்ததால் நடித்தேன்.
முடியை காவு வாங்கிய ஆயில்
ஹேர் ஆயில் விளம்பரத்தில் நடித்த சமயத்தில், எனக்கு இடுப்பு வரை யில் கூந்தல் இருக்கும். அந்த விளம்பரத் திற்காக ஃபோட்டோ ஷூட் பண்ணப்பட்ட போது முடி சைனிங்காக இருப்பதற்காக ஓர் ஆயிலை தடவினார்கள். ஒரு கட்டத் தில் முடிகள் உதிர தொடங்கி பட் பட் என முறிந்து போனது. அதனால் எனது முடியை சரி செய்வதற்காக கூந்தலின் நீளத்தை குறைத்துவிட்டேன்.
உண்மைகளை தெரிஞ்சுக்கலாமே
என் முடி போனதால் எனக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்தை திட்டித்தீர்த்து விட்டு, இனி இது போன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்தேன். ஆக, விளம்பரங்களில் நடிப் பவர்கள் குறைந்தபட்ச உண்மைகளையாவது அறிந்துகொள்வதுதான் நேர்மை என்று கூறியுள்ளார் குஷ்பு.
அழகு மட்டுமே முக்கியமா?
இன்றைக்கு நாம் புற அழகுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். தொண்ணூறுகளில் சுஸ்மிதா சென்னும், ஐஸ்வர்யா ராயும், லாரா தத்தாவும், யுக்தாமுகியும், பிரியங்கா சோப்ராவும், உலக அழகிகளாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் இந்திய பெண்களின் மனநிலையே மாறிவிட்டது. கிரீம்கள் விற்பனையும், அழகு சாதன பொருட்களின் விற்பனையும் அதிகரித்துவிட்டது.
எடை குறைப்பு
தலைமுடி வளரும் எண்ணெய், முக அழகு சாதன பொருட்களைப் போலவே எடைகுறைப்பு சிகிச்சை விளம்பரங்களும் ஏராளமானவர்களை ஏமாற்றுகின்றன. எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று பிரபல நடிகை ஒருவரே உயிரை விட்ட சம்பவமும் நடந்துள்ளது.
விழிப்புணர்வு அவசியம்
விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள் கோடிகளை வாங்கிக்கொண்டு நடிக்கின்றனர். என்ன விளம்பரம் செய்தால் என்ன? யார் வந்து சொன்னால் என்ன அதை வாங்கி உபயோகிக்கும் நாம் விழிப்புணர்வோடு இருந்தால் நம்மை யாரும் ஏமாற்றமுடியாது என்பதே உண்மை. ஏனெனில் குழந்தைகளின் உயிர் விசயத்தில் விளையாடுபவர்களுக்கு மாரல் எதிக்ஸ் தெரிந்திருக்க நியாமிருக்காது.