சட்டசபை தேர்தலுக்கு முன் பா.ஜ.க. கூட்டணிக்கு 'புதிய கட்சிகள்' வர வாய்ப்பு....சொல்வது வெங்கையாநாயுடு
கன்னியாகுமரி: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரிக்கு நேற்று வருகை தந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரிகளைத் தவிர அனைத்து கட்சிகளுமே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தவைதான்... தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகி உள்ளன.
புதிய கட்சிகள் வரும்
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தேர்தலின் போதுதான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
தரம் குறைந்த அரசியல்
ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் தற்கொலை விவகாரத்தில், பாஜ அரசுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தரம் குறைந்த அரசியல் செய்கிறது. இதே பல்கலைக்கழகத்தில் 2008 முதல் 2014-ம் ஆண்டு வரை 9 மாணவர்கள் மரணமடைந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ராகுல் காந்தி நேரில் சென்று விசாரிக்கவில்லை. இப்போது நேரில் சென்று இருக்கிறார் என்றால் ஏன்? அவர் தரம் குறைந்த அரசியலில் ஈடுபடுகிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது.
கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி
கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. வருகின்ற சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
ரூ50,000 கோடி முதலீடு
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நெடுஞ்சாலை, மின்சாரம், விவசாயம் ஆகிய துறைகளில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பயிர்பாதுகாப்பு திட்டத்துக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.