''முக்காவாசிப் பயலுக நம்ம பயலுகதான்...!''
சென்னை: தேமுதிக வேட்பாளர்களின் புரபல்களை வரிசையாக எடுத்துப் படித்துப் பார்த்தால் ஒரு ஒற்றுமை தெரியும்.. ஆமாம், முக்கால்வாசிப் பேர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
விஜயகாந்த் ரசிகர்கள்தானே தேமுதிகவல் இருக்கிறார்கள். இதில் என்ன அதிசயம் என்று கேட்கலாம். உண்மைதான். ஆனால் இந்த முறை நிறைய ரசிகர்களை வேட்பாளர்களாக்கியுள்ளார் கேப்டன் என்பதுதான் இங்கு பார்க்க வேண்டியது.
பலருக்கு இது முதல் முறை தேர்தல். தீவிர விஜயகாந்த் ரசிகர்களான இவர்களை யாரும் எளிதில் விலைக்கு வாங்கி விட முடியாது என்பதால்தான் தீவிர ரசிகர்களுக்கு இந்த முறைசீட் கொடுத்து தொகுதிகளுக்கு அனுப்பிவைத்துள்ளாராம் விஜயகாந்த்.
தாராவியிலிருந்து சிவனைந்த பெருமாள்
மும்பையில் நீண்ட காலமாக வசித்து வரும் சிவனைந்த பெருமாள் ஒரு தீவிர விஜயகாந்த் ரசிகர். அந்தக் காலத்திலேயே ரசிகர் மன்றத்தில் தீவிரமாக செயல்பட்டவர். தற்போது நல்ல வசதியுடன் மும்பையில் வசித்து வரும் அவரை சில பல காரணங்களுக்காக நெல்லையில் சீட் கொடுத்துக் கூட்டி வந்துள்ளார் விஜயகாந்த். விஜயகாந்த்துக்காக கைக்காசை தாராளமாக போட்டு செலவழிக்கத் தயங்காதாவராம் இந்த தாராவி பெருமாள்.
அன்று அண்ணன்.. இன்று தம்பி
இதேபோல திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராகியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி விருதுநகர் மாவட்டத்துக்காரர். இவரது அண்ணன் சுப்பராஜுவை கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் சீட் கொடுத்து விருதுநகரில் நிறுத்தினார் விஜயகாந்த். இந்த முறை கிட்டாவுக்கு வாய்ப்பளித்துள்ளா். கிருஷ்ணமூர்த்தியை அப்படித்தான் செல்லமாக அழைக்கிறார்கள்.
கரூர் என்எஸ்கே
என்எஸ்கே என்று தேமுதிகவினரால் செல்லமாக அழைக்கப்படும் என்.எஸ். கிருஷ்ணன் கரூரில் நிற்கிறார். இவர் ஆரம்பத்திலிருந்தே அதிமுகவைச் சேர்ந்தவர். தேமுதிக பிறந்தபோது இங்கு வந்து விட்டார். இவர் மட்டும்தான் தீவிர விஜயகாந்த் ரசிகர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இவரை அவ்வளவாக ஊரிலேயே யாருக்கும் தெரியாதாம்.
மச்சான் தோஸ்த்
விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷுக்கு நல்ல நெருக்கமாம் திருச்சி வேட்பாளர் விஜயக்குமார். தீவிர விஜயகாந்த் ரசிகரும் கூட. சுதீஷும், இவரும் சேர்ந்து ஒரு காலத்தில் பிசினஸ் செய்துள்ளனராம். இவர் யார் என்று தேமுதிகவனர் பலரும் கேட்பதால் விஜயகுமாருக்கு வெற்றி கிடைக்குமா என்பது ரொம்ப சந்தேகமாக உள்ளது.
வெறும் விசுவாசம்...
வெறும் விஜயகாந்த் விசுவாசத்திற்காகவே சீட் பிடித்துள்லார் ஜெய்சங்கர். இவர் கடலூர் வேட்பாளர். கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால் சிட் பண்ட் கம்பெனி நடத்தி வருகிறார். காசுக்கு குறைவில்லை.
காசு வாங்காமல் ஊசி போடும் டாக்டர்
கள்ளக்குறிச்சி வேட்பாளரான டாக்டர் ஈஸ்வரனுக்கு கொஞ்சம் போல சொந்த செல்வாக்கும் உள்ளது. கட்சிக்காரர் என்று சொன்னால் போதும், இலவசமாக மருத்துவம் பார்ப்பவராம் இவர். தொகுதியில் நல்ல அறிமுகமான பெயராகவும் உள்ளார். பாமகவை மட்டும் சமாளித்து விட்டார் என்றால் கரையேறி விடலாம் என்கிறார்கள்.
அட, இவரும் தீவிர விஜயகாந்த் ரசிகர்தாதாங்க..
இந்த வேட்பாளரும் தீவிர விஜயகாந்த் ரசிகர்தான். ஆரம்பத்தில் ரஜினியின் ரசிகராகவும் இருந்தவர். பின்னர் விஜயகாந்த் ரசிகரானார். இவருக்கும் விஜயகாந்த்துக்கும் ரொம்ப நெருக்கம். விஜயகாந்த்தின் தோளோடு தோள் நின்று கட்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்... இவர்தான் சேலம் வேட்பாளர் சுதீஷ்.. விஜயகாந்த்தின் மைத்துனர்.