சாலையோர மோட்டல்களில் பஸ்களை நிறுத்த அதிகாரிகள் கெடுபிடி: பஸ் பயணிகள் பாதிப்பு
திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களை அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மோட்டல்களில் நிறுத்த சொல்வதால் பயணிகள் கொதிப்பில் உள்ளனர்.
நெல்லையிலிருந்து திருச்சி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொலை தூர பயணங்களின்போது குறிப்பிட்ட மோட்டல்களில் அரசு பஸ்கள் சில நிமிடங்கள் நின்று செல்லும். பயணிகள் உணவு சாப்பிடவும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மோட்டல்களில் பயணிகளிடம் தறுமாறாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு வழி இல்லாததால் பயணிகள் இரண்டு அல்லது மூன்று மடங்கு பணம் கொடுத்து உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பிடிக்காத மோட்டல்களில் பஸ்களை நிறுத்தும் டிரைவர்கள், கண்டக்டர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக திரு்ச்செந்தூரில் இருந்து மதுரை, கோவை, திண்டுக்கல், கரூர் செல்லும் பஸ்களின் டிரைவர்கள் எந்த மோட்டல்கலில் பஸ்களை நிறுத்துகின்றனர் என தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மதுரை-திருச்செந்தூர் பஸ்கள் பஸ்கள் எட்டையபுரம் அருகே உள்ள கரந்தை மோட்டல் அல்லது அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி மோட்டல்களில் உணவருந்தும் வகையில் நின்று செல்கின்றன. இந்த இரு மோட்டல்களிலும் நிற்க கூடாது என டிரைவர்கள்,கண்டக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பஸ்களை நிறுத்தும் டிரைவர், கண்டக்டர்களை செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல்கள் அதிகாரிகளுக்கு செல்லும் போது சம்பந்தப்பட்ட டிரைவர்கள், கண்டர்களுக்கு மெமோ வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் நிறுத்த சொல்லும் மோட்டல்கள் பயணிகளுக்கு சவுகரியம் இல்லாத பகுதிகளில் உள்ளது. இந்த களோபரத்தால் சுகமாக பயணம் செய்ய வேண்டிய பயணிகள் கடும் அவஸ்தையில் உள்ளனர்.