மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்த மகன் - கல்லைப் போட்டு கொலை செய்த தாய்க்கு ஆயுள்!
ஈரோடு: ஈரோட்டில் மாற்று ஜாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக பெற்ற மகனையே கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி கோபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நல்ல கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. அவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுடைய மகன் செல்வராஜ். இவர் கொளப்பலூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
செல்வராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் பெற்றோரை சம்மதிக்க வைத்து அவர்களுடைய வீட்டிலேயே மாடி அறையில் மனைவியுடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்தார்.
செல்வராஜ் காதலித்து திருமணம் செய்த பெண் வேறு ஜாதியை சேர்ந்தவர். அதனால் ராஜம்மாள் மகன் மீது தாங்கமுடியாத ஆத்திரத்திலேயே இருந்துள்ளார். செல்வராஜ் திருமணம் செய்துகொண்ட 5 ஆவது நாள் அதிகாலையில் வீட்டின் மாடியறையில் செல்வராஜ் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ராஜம்மாள் பெரிய கல்லை தூக்கிக்கொண்டு வந்து மகன் செல்வராஜின் தலையில் போட்டுள்ளார்.
இதில் தலை நசுங்கிய செல்வராஜ் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு கோபி 3 ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. பெற்ற மகனின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்ற ராஜம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ராஜம்மாள் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.