61 பேரை காவு வாங்கிய மவுலிவாக்கம் விபத்து: 2வது கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை: 61 பேரை காவு வாங்கிய சென்னை மவுலிவாக்கத்தில் அபாயகரமான 2வது கட்டிடம் இடிக்கும் பணி இன்று முதல் துவங்கியது. முதல் கட்டமாக வெடி பொருட்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டிடம் 3 வாரத்திற்குள் தரை மட்டமாகிவிடும் என சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் அளித்த கெடு முடிந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட, 11 மாடி குடியிருப்பு கட்டிடம், 2014 ஜூன், 28ல், இடிந்து விழுந்ததில், 61 பேர் உயிரிழந்தனர். எஞ்சியுள்ள, 'ஏ பிளாக்' கட்டிடத்தை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், கட்டிடத்தை இடிக்க மே 12ல் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியது.
61 பேர் பலி
மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த 2014 ஜூன் 28ம் தேதி பெய்த மழையின்போது திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வெளி மாநில பணியாளர்கள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.
இடிக்க பரிந்துரை
இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி தலைமையிலான கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில், இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தின் அஸ்திவாரம் பலமானதாக இல்லை. எனவே அந்த கட்டிடத்தையும் உடனடியாக இடிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து, இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தின் பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்தை உடனடியாக இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி கட்டிட நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக வழக்கின் அனைத்து சாட்சிகளும் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும், என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இடிந்த கட்டிடத்திற்கு அருகிலுள்ள கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, டெல்லி ஐஐடி பேராசிரியர், தேசிய கட்டுமானக் கழக (என்பிசிசி) நிபுணர், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் 2 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த குழுவினர் மவுலிவாக்கத்தில் உள்ள கட்டிடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அதை தொடர்ந்து நிபுணர் குழுவின் தலைவர் அசோக் குமார் குப்தா தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், 2வது கட்டிடத்தின் தூண்கள் பாதுகாப்பானதாக இல்லை. அதன் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
2 மாதம் அவகாசம்
தூண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு முன், கட்டிடத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவிற்கு உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும். தரைத்தளம் முதல் 7வது தளம் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். தரைத்தளத்தில் சேறும், சகதியுமாக தண்ணீர் தேங்கியுள்ளது. அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடம் உறுதியுடன்தான் உள்ளது என உறுதியாக கூற முடியாது. கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்ய கூடுதலாக 2 மாத காலமாகும். எனவே 2 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அறிக்கை தாக்கல்
இதை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, கட்டிடம் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நிபுணர் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, நிபுணர் குழுவினர் தங்களது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள 2வது கட்டிடம் வாழ்வதற்கு தகுதியற்றதாக உள்ளதாக தெரிவித்தனர்.
தேங்கிய தண்ணீர்
நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவை தாங்கும் திறன் உள்ளதா என்பது சந்தேகமே. கடந்த 6 மாதங்களுக்கு முன் பெய்த மழையில் தேங்கிய தண்ணீர் தற்போது வரை தேங்கியுள்ளது. இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்ய முழுமையாக 3 மாத காலம் தேவைப்படும். கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை சரியாக இல்லை, என்று கூறப்பட்டிருந்தது.
இடிக்க சம்மதம்
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழக அரசின் சார்பில் வக்கீல் யோகேஷ் கண்ணா ஆஜரானார். கட்டிட உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான் வாதிடும்போது, இந்த அறிக்கையை முதல் கட்டிடம் இடிந்து விழுந்த வழக்கில் பயன்படுத்தக்கூடாது. இயற்கை சீற்றங்களை கட்டிடம் தாங்காது என்பதால் கட்டிடத்தை இடிக்க நாங்கள் சம்மதிக்கிறோம்.
கட்டிட கழிவுகள்
கட்டிட கழிவுகளை நாங்களே எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார். நீதிபதிகள் கூறிய உத்தரவில், நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். கட்டிடத்தை உடனடியாக இடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடிக்கும் செலவு
இடிப்பதற்கு ஆகும் செலவை கட்டிட உரிமையாளர்கள் 4 வாரத்திற்குள் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். கட்டிட கழிவுகளை உரிமையாளர்களே எடுத்துக் கொள்ளலாம். முதல் கட்டிடம் இடிந்தது தொடர்பான ஆதாரங்கள் ஏதாவது எடுக்க வேண்டுமெனில், அதை சேகரித்துவிட்டு, 2 வாரங்களுக்குள் கட்டிட உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கட்டிடம் தரைமட்டம்
உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து 2வது கட்டடம் இடிக்கும் பணி இன்று முதல் துவங்கியது. முதல் கட்டமாக வெடி பொருட்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டடம் 3 வாரத்திற்குள் தரை மட்டமாகிவிடும் என சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் அளித்த கெடு முடிந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.