முகமது அலிக்கு மீன் கறி விருந்து கொடுத்து நெகிழ வைத்த எம்.ஜி.ஆர்
சென்னை : மறைந்த குத்துச்சண்டை பிதாமகன் 'தி கிரேட்டஸ்ட்' முகமது அலி தமிழகத்திற்கு வந்த போது அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீன் கறி குழம்புடன் விருந்து கொடுத்து அசத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான் என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் 1980ம் ஆண்டு சென்னைக்கு வந்திருந்தார் அலி.
ஆரவாரமாக நடைபெற்ற போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் என அலியிடம் கேட்டாராம்.
அதற்கு முகமது அலி, சென்னையில் மீன் சாப்பாடு சுவையாக இருக்கும் என்கிறார்களேஅது எங்கு கிடைக்கும்? என்றாராம்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு வயிறு நிறைய உணவு கொடுத்து அனுப்பும் வள்ளல் தன்மை கொண்ட எம்.ஜி.ஆரிடம், தான் விரும்பும் முகமது அலி கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடியே ராமாவரம் தோட்டத்திற்கு சுட சுட விருந்து தயாரானது.
ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் சாதம், மீன் குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், வேகவைத்த முட்டை, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் தயார் செய்யப்பட்டு முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் மீன் சாப்பாடு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி, 'எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும்.
நீங்கள் அளித்த விருந்தில் உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான் என்று நெகிழ்வாக கூறினாராம் முகமது அலி. இதைக் கேட்டு எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியடைந்தாராம். முகமது அலியின் சென்னை விசிட் பற்றி இன்றைக்கும் பலர் நினைவு கூறுகின்றனர்
திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டு சென்னை மக்களிடமும், புரட்சித்தலைவரிடமும் இருந்து அன்போடு பிரியாவிடை பெற்ற முகமது அலி, இன்று உலக மக்கள் அனைவரிடம் இருந்தும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு விட்டார்.