எங்கெங்கும் தண்ணீர்.. மக்கள் விட்ட கண்ணீர்.. மும்பையை நினைக்கும்போது மனதில் நிழலாடும் 2015!
சென்னை: மும்பை மாநகரம் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளது. எப்படி 2015ம் ஆண்டு சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி மூழ்கியதோ அதே போன்றதொரு பேரிழப்பை மும்பை சந்தித்துள்ளது. இன்று மும்பைக்கு ஏற்பட்ட அதே நிலைமைதான் 2015ல் சென்னைக்கும் நேர்ந்தது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மாநகரம் நீரில் மூழ்கிய காட்சிகள் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாதது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு. நீரில் மூழ்கிய வீடுகள், படகுகளில் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்.. பிணத்தைக் கூட அடக்கம் செய்ய முடியாமல் தவித்த பேரவலம்.. மறக்க முடியாக சோக நாட்கள் அவை.
Recommended Video

அக்கம் பக்கத்தினரின் முகம், பெயர் கூட தெரியாமல் வாழ்ந்த மக்களுக்கு அந்த மழை நாட்கள் அன்பையும், நட்பையும் கற்றுக் கொடுத்தது. ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ வேண்டும் என்ற நல்லிணக்கத்தைக் கொடுத்தது. மும்பை மழைக்காலம், சென்னையின் சோக வடுக்களை நமக்குள் கிளர்ந்தெழச் செய்வதை தடுக்க முடியவில்லை.

கோபம் காட்டிய கமல்
கமல்ஹாசன் அன்றே அரசு நிர்வாகத்தின் அவலம் குறித்து கோபம் காட்டி மக்களின் குமுறலின் பிரதிநிதியாக காணப்பட்டார். அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயிருந்த அவலத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

சடலத்துடன் போராடிய மக்கள்
20 மணி நேரமாக தனது இறந்த தாயின் உடலுடன் அடக்கம் செய்ய முடியாமல் தவித்த கதையையும் சென்னை கண்டது. இவர் மட்டுமல்ல பல இடங்களில் இதுபோன்ற சூழல்தான் அப்போது நிலவியது.

பதறித் தவித்த உறவுகள்
சென்னையில் வசிக்கும் தங்களது குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் பதறித் தவித்த மனங்களை மறக்க முடியாது. அவர்கள் பட்ட கஷ்டத்தை விவரிக்க முடியாது. இன்று நினைத்தாலும் பதறுகிறது.

குடிக்க தண்ணீர் இல்லை
கழுத்தளவுக்குத் தண்ணீர் ஓடியும் ஒரு வாய் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காத கடுமையான சூழலில் மக்கள் இருந்த காலம் அது. குடிநீர் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் யானை விலை குதிரை விலையாக இருந்தது.

உதவிக்கு ஓடி வந்த மனிதம்
வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள் பலர் வெளியூர்களுக்குக் கிளம்பியபோது பஸ், ரயில் என எதுவும் கிடைக்காமல் திண்டாடினர். ஆனால் சில நல்ல உள்ளங்கள் இலவசமாக பஸ் பயணத்திற்கு ஏற்பாடு செய்த நெகிழ்ச்சியையும் சென்னை அப்போது கண்டது.

கலங்கிப் போன கடலூர்
சென்னை சிதைந்து போனது என்றால் கடலூர் கலங்கிப் போனது. சென்னை மீது விழுந்த போகஸ், கடலூர் மீது குறைந்த அளவே விழுந்தது இன்னொரு சோகச் செய்தி.

மறக்க முடியாத மனிதர்கள்
இந்தப் பெண்மணியைப் போலவே ஆயிரக்கணக்கான ஆபத்பாந்தவன்களை, நல்ல உள்ளங்களை சென்னை அன்று கண்டது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணை பத்திரமாக மீட்டு உரிய நேரத்தில் அவரது உயிரையும், குழந்தையின் உயிரையும் காப்பாற்றிய அந்த நல்ல மனிதரை மறக்க முடியுமா என்ன?

ஜெயலலிதா இருந்தார்
அன்று ஜெயலலிதா இருந்தார். அமைச்சர்களும் இருந்தனர். ஆனால் உதவிகள்தான் தேவையான நேரத்தில், போதுமான அளவில் கிடைக்காமல் போனது.

கருணாநிதியும்
திமுக தலைவர் கருணாநிதி, திமுகவினரை நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு முடுக்கி விட்டதோடு, அனைத்துக் கட்சிக் குழுவையும் அமைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications