மழையால் மும்பையில் இருந்து மதுரைக்கு 8 மணிநேரம் தாமதாக வந்த ரயில்: பயணிகள் தவிப்பு
மதுரை: மும்பையில் பெய்த கனமழை காரணமாக அங்கிருந்து மதுரைக்கு வந்த ரயில் 8 மணிநேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் பெய்த கன மழையால் சாலைகள் வெள்ளக்காடாகின. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றப்பட்டது. மும்பையில் இருந்து மதுரை வழியாக நெல்லை வரை இயக்கப்படும் சாளுக்யா எக்ஸ்பிரஸ் சேவையும் பாதிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை மும்பை தாதர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய சாளுக்யா எக்ஸ்பிரஸ் மழை காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு மதுரைக்கு வர வேண்டிய அந்த ரயில் 8 மணிநேரம் தாமதாக மாலை 4 மணிக்கு வந்தது.
நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு மும்பை கிளம்பிய ரயில் இரவு 1 மணிக்கு மதுரைக்கு வந்தது. இந்த ரயில் வழக்கமாக நெல்லையில் இருந்து திங்கட்கிழமை மதியம் 2.45 மணிக்கு கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் இருந்து ரயில் எத்தனை மணிக்கு புறப்படும் என்ற தகவல் மதுரையில் இருந்த பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரயில் வருமா, வராதா என்று பயணிகள் தவித்துள்ளனர்.
நெல்லையில் இருந்து திங்கட்கிழமை மும்பைக்கு ரயில் இயக்கப்படுவது பற்றி ரயில்வே துறையின் ஆன்லைன் சேவையிலும் மாலை 5 மணி வரை விவரம் தெரிவிக்கப்படவில்லை.