முரசொலி பவள விழா: அரசியல், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி.. கருணாநிதி உருக்கம்
அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி என முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு, "அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி" என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி அன்று முரசொலி பத்திரிகை தொடங்கிய நாளாகும். கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி 1948ல் வார இதழாகவும், 1960ல் நாளேடாகவும் அச்சில் வெளிவரத் தொடங்கியது.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழா ஆண்டு திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் நாளையும் முரசொலியின் பவள விழா பிரமாண்டமாக திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முரசொலியின் பவளவிழாவிற்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார். அவரது நன்றி நவிலலில், "கழக உடன்பிறப்புகளையும்-அன்பெனும் அமுதூட்டி ஆதரவுக் கரம் நீட்டித் துணை நிற்கும் கோடிக்கணக்கான தமிழ் பெருமக்களையும்-அரசியலுக்கும் கட்சி பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டு வாழ்த்தி அருளுகின்ற அனைத்து நெஞ்சங்களையும் தூய துணைகளாகக் கொண்டு இத்தனை ஆண்டுகளைத் தாண்டிவிட்டோமே என்ற மலைப்புடன் திரும்பிப் பார்க்கிறேன், என் விழிகள் மட்டும் விரித்திடவில்லை-பெருமூச்சு காரணமாக என் சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன.
"இந்தத் துணைகள் என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்ற வேண்டுகோளுடன், எஞ்சியுள்ள பயணத்தைத் தொடருகிறேன். என் கடன் பணி செய்து கிடப்பதே!" என்று உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.