மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது கொலை முயற்சி வழக்கு
மதுரை: மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் கல்யாணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(67). மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும், காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவின் அமைப்பாளராகவும் உள்ளார்.
அவர் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு அருகில் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவரை மர்ம நபர்கள் தாக்கினர். இதில் அவரின் 2 கைகளும் முறிந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி அவர் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தவறான தகவல்களை தந்து துணைவேந்தர் பதவிக்கு வந்துள்ளார். இது குறித்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவரது நிர்வாக திறமையின்மையால் நடந்து வரும் சீர்கேடுகளை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு என்ற அமைப்பு மூலமாக அம்பலப்படுத்தி வருகிறேன்.
இதற்கு பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் எனக்கு எதிராக பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் துணைவேந்தர் தரப்பினர் பலமுறை என்னை மிரட்டினர்.
இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி எனது பேட்டி ஒரு நாளிதழில் வெளியானது. அதைத்தொடர்ந்து கடந்த 16-ந் தேதி காலை நான் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, 2 மர்ம நபர்கள் எனக்கு பின்னால் இருந்து என்னை உருட்டுக்கட்டையால் தாக்கினர். அவர்கள், ‘‘துணை வேந்தருக்கு எதிராக பேட்டி கொடுக்கிறாயா, உன்னை கொல்லாமல் விடமாட்டோம்" என்று சொல்லி நான் மயங்கி விழும் வரை சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலுக்கு காரணமான மேற்சொன்ன நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கல்யாணி, பதிவாளர் முத்துமாணிக்கம், இளைஞர் நலத்துறை பேராசிரியர் செல்லதுரை, மக்கள் தொடர்பு அலுவலர் அறிவழகன், ஓய்வு பெற்ற ஊழியர் எஸ்.வி.கே. செல்வராஜ் மற்றும் 2 பேர் மீது கொலை முயற்சி, கொலை செய்யத்தூண்டுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்டம் 109, 294(பி), 307, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துணை வேந்தர் கல்யாணி மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.