அரை மணி நேரம் நேரில் சந்தித்த முருகன் - நளினி.. அரித்ரா குறித்து உருக்கம்
வேலூர்: வேலூர் சிறையில் முருகன் மற்றும் நளினி ஆகியோர் நேற்று சந்தித்துக் கொண்டனர். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பின்போது நளினி அழுத கண்களுடன் முருகனுடன் பேசியதாகவும், மகள் அரித்ரா குறித்தும், விடுதலை எப்போது என்பது குறித்தும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்திப்பது வழக்கம். அதன்படி இந்த சந்திப்பு நேற்று நடந்தது. இதற்காக முருகனை, வேலூர் மகளிர் சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். காலை ஏழரை மணிக்கு நளினியைச் சந்தித்தார் முருகன். இருவரும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு முழுவதும் நளினி அழுத கண்களுடனேயே பேசியுள்ளார். மகள் குறித்துத்தான் நிறையப் பேசினார். விடுதலை குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.
அரை மணி நேர சந்திப்புக்குப் பின்னர் முருகன் மீண்டும் சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.
நளினி முருகன் தம்பதியின் மகள் அரித்ரா தற்போது லண்டனில் தங்கியுள்ளார். டாக்டருக்குப் படித்து வருகிறார். அவர் வேலூர் மகளிர் சிறையில்தான் பிறந்தார் என்பது நினைவிருக்கலாம்.