வாஜ்பாய் மறைவு மக்களிடம் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன்
வாஜ்பாய் மறைவு மக்களிடம் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: பாரத பிரதமராக மூன்று முறை பதவி வகித்து பல சாதனைகளைப் புரிந்த அடல் பிகாரி வாஜ்பாய் மறைவுச் செய்தி நாட்டு மக்களின் உள்ளங்களில் துக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில்,

"இந்திய வரலாற்றில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், மௌலானா அபுல் கலாம் ஆஸாத் போன்ற தலைவர்கள் வகுத்தளித்த அரசு நிர்வாகப் பாதையிலிருந்து மாறுபட்டு வேறு பாதையிலும் ஆட்சி அதிகாரத்தை செலுத்த முடியும் என்பதை நிலை நிறுத்த முயற்சி செய்தவர் வாஜ்பாய்.
நிறைந்த அரசியல் அனுபவம், காவியப் புலமை, வரலாற்று ஞானம், சமயங்களைப் பற்றிய ஒப்பாய்வு, புதிய சீர்திருத்தம், பொருளாதாரக் கொள்கை எனத் தனக்கே உரிய தனித்தன்மைகளைப் பின்பற்றியவர்.
ஆனால், அதே சமயத்தில் மக்களுக்கு இடையில் மதக் கொள்கைகளை பேசி வெறுப்பு அரசியலை நடத்தியவர் அல்லர். இந்திய மக்களின் கலாச்சாரமே நாட்டுக்குப் பெருமை சேர்க்க வல்லது என முழு நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர்.
அவரின் உரைகளில், உண்மைகள் நிறைந்திருந்தது, நாட்டுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்னும் துடிப்பு மிகுந்திருந்தது. தேசிய வழித் தடங்களை நான்கு வழி, எட்டு வழிச் சாலைகளாக அமைத்து இந்தியா ஒளிர வேண்டும் என்று ஆசித்து அரசியல் நடத்தியவர் அவர்.
அவர் ஓரு ஜன சங்கி தான், இந்து மதப் பற்றாளர் தான், இந்திக்கு முன்னுரிமை கொடுத்தவர் தான். அதே சமயத்தில் பிற அரசியல் இலக்குகளை வெறுத்து பகைத்து ஒதுக்கிட ஒழித்திட நினைத்தவர் அல்லர். பிற மதங்களின் கொள்கைகளை மதித்துப் போற்றத் தவறியவர் அல்லர். இந்தியாவில் பழக்கத்தில் உள்ள எந்த மொழியையும் அழிக்க நினைத்தவர் அல்லர்.
குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கரமான வகுப்புக் கலவரத்தால் முஸ்லிம் சிறுபான்மையினர் பெருமளவு பாதிப்புக்கு ஆளான போது அன்றைக்கு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த இன்றைய இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து மக்களின் நேசராகத் திகழ்ந்தவர் வாஜ்பாய்.
இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கைக்கு ஒரு புதிய லட்சியத்தை ஈந்த பெருமை அவருக்கு உண்டு. நண்பர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அண்டை வீட்டுக்காரர்களை மாற்றிக் கொண்டிருக்க முடியாது. அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாகிஸ்தானுடன் நேசமும் உறவும் வளர்க்க விரும்பிய சமாதானப் புறாவாகத் திகழ்ந்தவர் வாஜ்பாய்.
அவருடன் நாடாளுமன்றத்தில் பழகும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது. மதங்களை கடந்து, கட்சிகளை கடந்து மனித நேயப் பார்வையோடு எல்லோரிடமும் அவர் பழகிய பாங்கு என்றும் மறக்க முடியாததாகும். மாறுபட்ட, வேறுபட்ட ஓன்றுக் கொன்று முரண்பட்ட சித்தாந்தங்களை பின்பற்றுவோர் ஆட்சிக் கட்டிலில் அமரலாம். ஆனால், இந்தியாவின் பாரம்பரிய பெருமையை அதன் ஆன்மீக மேன்மையை போற்ற வேண்டும்.
வேற்றுமையில், ஒற்றுமை காணும் உன்னதப் பண்பை, சமய நல்லிணக்கம் பேணும் மாண்பை எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேய மாட்சிமையை நிலை நிறுத்துவதை அரசியல் ஆளுமைகள் லட்சியமாகக் கொள்ள வேண்டும். இந்த படிப்பினைகளை வாஜ்பாய் விட்டுச் சென்றிருக்கிறார். இந்தியாவின் பெருமையைப் பேணுவோர் வாஜ்பாய் வாழ்விலிருந்து பாடம் பெற வேண்டும் என்பதே இன்றையத் தேவையாகும்." என்று பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications