ஈரோட்டில் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் - முத்தரசன்
ஈரோடு இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகள்தான் காரணம் என்று முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை : காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஈரோட்டில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து இறந்ததற்கு மத்திய மாநில அரசுகள் தான் காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் இன்று நடந்தது.
இதில் பிரதமரின் தமிழகம் வருவதைக் கண்டித்து தீக்குளித்த ஈரோடு மாவட்டம் சித்தோட்டைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பலவடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டுவது, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது என்ற இயக்கம் நடைபெற்றது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், சித்தோடு நகரில் வசித்து வரும் தர்மலிங்கம் என்ற இளைஞர், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையை விமர்சித்தும், காவிரி நீர் உரிமையை வலியுறுத்தியும் சுவற்றில் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து மரணமடைந்துள்ள நெஞ்சைப் பிளக்கும் செய்தி கிடைத்தது.
தர்மலிங்கத்தின் துயரச் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகு முறைகளே காரணமாகும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டுகிறது. தர்மலிங்கத்தின் முடிவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
காவிரி நீர் உரிமையை நாம் உயிருடன் வாழ்ந்து போராடி வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கையை எவர் ஒருவரும் ஒருபோதும் இழந்து விடக்கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது. காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி தன்னுயிர் தந்த தர்மலிங்கத்தின் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.