முத்துக்குமாரசாமி தற்கொலை: அக்ரிகிருஷ்ணமூர்த்தியை காவலில் எடுக்க சி.பி.சி.ஐ.டி முடிவு
திருநெல்வேலி: வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நெல்லை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
வேளாண்மை துறையில் 7 டிரைவர் பணியிடங்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், முத்துக்குமாரசாமி நியமனம் செய்ததால்தான் அவருக்கு போன் மூலமும், நேரிலும் மிரட்டல்கள் வந்தன. தொடர் மிரட்டல் காரணமாக கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அவர் ரயில்முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து வழக்கில் வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் வேளாண்மை துறை தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டு நேற்று பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் இன்று (திங்கட்கிழமை) நெல்லை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு பெறும் நிலையில்
முத்துக்குமாரசாமிக்கு 57 வயது ஆகிவிட்டது. அவர் சில மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார் என்றால், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அவருக்கு தொல்லைகள் ஏற்பட்டு உள்ளன. ஒருவேளை தனது துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்று நினைத்தால், அந்த துறையின் மேல்மட்டத்தில் இருந்தும் அவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன. போலீசாரிடம் புகார் அளிக்க நினைத்தால், உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர்கள் தொல்லை கொடுத்து இருக்கிறார்கள்.
கடைசி அஸ்திரம்
கடைசி வரை தனது முடிவில் பின்வாங்கால் இருந்த முத்துக்குமாரசாமியிடம் இறுதியாக ஒரு அஸ்திரத்தை வீசினார்கள். 7 பணியிடத்துக்கும் சேர்த்து ஒரு பெரும் தொகையை நிர்ணயித்து இருந்தோம். அந்த பணியிடத்தை நிரப்பிவிட்டதால், அந்த தொகையை முத்துக்குமாரசாமிதான் தர வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.
கெஞ்சியும் விடாமல்
சில மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த முத்துக்குமாரசாமிக்கு, இந்த மிரட்டல் பெரும் மனநெருக்கடியை ஏற்படுத்தியது. கடைசியில் தனது வருங்கால சேமிப்பு நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொடுத்து விடுவதாகவும், அந்த பிரச்சினையை விட்டுவிடும்படியும் அவர் கெஞ்சியதாக தெரிகிறது.
தற்கொலை முடிவு
கடைசியில் கடந்த பிப்ரவரி 20ஆம்தேதி அலுவலக பணிகளை கவனிக்காமல், மோட்டார் சைக்கிளில் மனக்குழப்பத்துடன் கிளம்பிய முத்துக்குமாரசாமி, நெல்லை பாலபாக்யா நகரில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஆளுங்கட்சியினர் சிலர் அவரை அவதூறாக திட்டியதாகவும், தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலே அவரை தற்கொலைக்கு தள்ளியதாக கூறப்படுகிறது.
செல்போன் பேச்சு
முத்துக்குமாரசாமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு போன் செய்து அதிக நேரம் யார்-யார் பேசினர், தற்கொலை செய்துகொள்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக அவரிடம் பேசியவர்கள் யார், எந்தெந்த அரசியல் பிரபலங்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களிடம் இருந்து அவருக்கு அழைப்புகள் வந்தன என்பது பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வேறு வேறு போன்களில் இருந்து
அவரது செல்போனை ஆராய்ந்தால், பல நம்பர்களில் இருந்து டிரைவர் பணியிடம் சம்பந்தமாகத்தான் அவரிடம் பேசி இருக்கிறார்கள். தங்களது செல்போனில் இருந்து பேசினால், அதை அப்படியே டேப் செய்து வெளியிடும் பட்சத்தில் பிரச்சினையாகிவிடும் என்று கருதி தங்களுக்கு தெரிந்தவர்கள் போனில் இருந்து, முத்துக்குமாரசாமியிடம் பேசி இருக்கிறார்கள்.
தொடர் மிரட்டல்
நெல்லையைச் சேர்ந்த போஸ்டர் ஒட்டும் தொழிலாளியின் நம்பரில் இருந்தும் போன் சென்றுள்ளது.அந்த நபரிடம் விசாரணை நடத்தினோம். அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் அவசரமாக போன் செய்ய வேண்டும் என்று போனை கேட்டார். அதனால் கொடுத்தேன். அவர் பேசிவிட்டு, ரீசார்ஜ் செய்து தருவதாக கூறினார். அதனால் பிரச்சினை ஏதும் வராது என்று அப்போது நினைத்தேன் என்று அந்த தொழிலாளி கூறியுள்ளார் அவரிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பல பிரமுகர்கள் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.