டி.எஸ்.பி விஷ்ணு பிரியா மரணத்தில் விலகாத மர்மங்கள்… விடை கிடைப்பது எப்போது?
நாமக்கல்: டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கு, அவரது தோழி டி.எஸ்.பி மகேஸ்வரி, திருக்கோஷ்டியூர் கோயில் குருக்கள் விஜயராகவன், மதுரை வழக்கறிஞர் மோனிக் மாளவியா ஆகிய மூன்று பேரை சுற்றத் தொடங்கியுள்ளது. இதற்கான காரணமாக, விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கு முன்பாக இரண்டரை மணிநேரம் வழக்கறிஞர் மாளவியா பேசியுள்ளார்.
விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குப் பிறகு அர்ச்சகர் விஜயராகவன் மாயமாகிவிட்டார். அதேபோல கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரிதான் கடைசி கடைசியாக விஷ்ணு பிரியா உடன் பேசியுள்ளார் அவரது செல்போனும் இப்போது மாயமாகியுள்ளது. விஷ்ணு பிரியாவின் மரணத்தில் உள்ள விடை தெரியாக கேள்விகளுக்கு அவரது செல்போனில் விடை தேடிக்கொண்டிருக்கின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீசார்.
விஷ்ணு பிரியா பேசியது என்ன?
கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் போலீஸ் உயர் அதிகாரிகள்தான் என்று அந்த கொலைவழக்கில் தேடப்பட்டு வரும் யுவராஜ் பரபரப்பு ஆடியோ வெளியிட்ட நிலையில் அது எடிட் செய்யப்பட்டது என்கிறது போலீஸ் தரப்பு.
சி.பி.சி.ஐ.டி வசம்
யுவராஜூடன் பேசியதை விஷ்ணுபிரியாவும் ரெக்கார்ட் செய்தாராம் ஒருமணிநேரம் பேசிய ஆடியோவை அப்போதே எஸ்.பியிடம் கொடுத்துவிட்டாராம் விஷ்ணு பிரியா. அந்த ஆடியோ இப்போது சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம்.
வழக்கறிஞர் மோனிக் மாளவியா
விஷ்ணுபிரியா தற்கொலை செய்வதற்கு முன்பாக மதுரை உயர்மன்றக்கிளை வழக்கறிஞர் மோனிக் மாளவியா என்பவர் கடந்த 18ம் தேதி அதாவது விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட தினத்தில் காலை 5 மணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிவரை 13 முறை பேசியிருக்கிறாராம். பிற்பகல் 2.10 மணிக்கு எஸ்.பி செந்தில்குமாரை அழைத்து விஷ்ணுபிரியா பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 18ம் தேதி மதியம் 2.45 மணிக்கு மாளவியா உடன் பேசி முடித்த உடன் டி.எஸ்.பி மகேஸ்வரியிடம் இடம் அழைப்பு வரவே அவருடன் பேசியுள்ளார் விஷ்ணு பிரியா. கடைசியாக மகேஸ்வரி எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார்.
விசாரணைக்கு வந்த வக்கீல்
சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கறிஞர் மோனிக் மாளவியாவிற்கு சம்மன் அனுப்பியதை அடுத்து நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விஷ்ணுபிரியா மரணம் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திசைமாறும் விசாரணை
எட்டேகால் மணிநேர விசாரணைக்கு பின் செய்தியாளரிடம் பேசிய வழக்கறிஞர் மாளவியா, சி.பி.சி.ஐ.டியின் விசாரணை போக்கு சரியில்லை என குற்றம் சாட்டினார். காதல்தான் தற்கொலைக்கு காரணம் எனக்கூறி வழக்கை முடிக்க தீவிரம காட்டி வருகின்றனர்.
பலிகடா ஆக்க முயற்சி
வழக்கை விரைந்து முடிக்க அப்பாவி ஒருவரை பலிகாடாக்க முயற்சி என புகார் அளித்துள்ளார். எஸ்.பி. மட்டுமல்ல டி.ஐ.ஜி. ஏடிஜிபி மட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபிரியாவுக்கு கீழ் பணியாற்றிய ஆய்வாளர் மூலமும் நெருக்கடி எனவும் மாளவியா தெரிவித்தார்.
விஷ்ணுபிரியாவிற்கு நெருக்கடி
கோகுல்ராஜ் வழக்கு மட்டுமல்ல தொழிலதிபர் ஒருவர் கொலை வழக்கிலும் நெருக்கடி அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். வழக்கை விரைந்து முடித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என சிபிசிஐடி முனைப்பு காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாயமான செல்போன்
இதனிடையே மருத்துவ விடுப்பில் சென்று ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விஷ்ணு பிரியாவின் தோழி டி.எஸ்.பி மகேஸ்வரி கடந்த 26ம் தேதி கீழக்கரைக்கு வந்து பணியில் சேர்ந்தார். மறுநாள் 27ம் தேதி இரவு அவரது செல்போன் மாயமாகிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து ரசீது பெற்றுள்ளார். அந்த செல்போனில்தான் விஷ்ணுபிரியாவிற்கு அவர் கடைசியாக எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார்.
வாட்ஸ் அப் தகவல்கள்
விஷ்ணுபிரியா உடன், வழக்கறிஞர் மாளவியா, டி.எஸ்.பி மகேஸ்வரி, அர்ச்சகர் விஜயராகவன் ஆகியோர் நிறைய தகவல்களை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளனர். அந்த தகவல்களை பெறவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் முயற்சி செய்து வருகிறார்களாம். இவை எல்லாம் கிடைத்த உடன் விஷ்ணு பிரியாவின் மரணத்தில் உள்ள மர்மர் விலகும் என்று எதிர்பார்க்கலாம்.