நடிகர் சங்க வளாகத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போலீஸ் தடியடி
சென்னை: நடிகர் சங்க மோதலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் லேசான தடியடி நடத்தி மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர்.
இந்த தடியடியில் 5 பேருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 20 பேரை போலீஸார் வேனில் ஏற்றி வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் கூட்டப்பட்டது. இதற்கு மிரட்டல் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டிருந்தது. அது போதாது என்று தனியார் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறைந்த அளவிலேயே போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் உறுப்பினர் அடையாள அட்டை இல்லாமல் பலர் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் போலீஸ் தடுப்பையும் மீறி உள்ளே புகுந்து விட்டனர். இதனால் அவர்களுக்கும் விஷால் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதனால் நடிகர் சங்க வளாகமே போர்க்களம் போல மாறியது.
இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி உறுப்பினர் அட்டை இல்லாமல் புகுந்தவர்களை கலைத்தனர். மேலும் 20 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேனில் ஏற்றி கொண்டு சென்றனர். தடியடியில் 5 பேருக்கு மண்டை உடைந்ததாக ஒரு தகவல் கூறுகிறது.
இந்த மோதலைத் தொடர்ந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். முன்னதாக குறைந்த அளவே போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications