நாகையில் 5 நாட்களாக நீடித்த மீனவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!
பிரிட்ஜோ படுகொலையைக் கண்டித்து நாகையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற மீனவர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: பிரிட்ஜோ படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாகப்பட்டினத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற மீனவர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை சுட்டுப் படுகொலை செய்தது. இப்படுகொலையைக் கண்டித்து நீதி கோரி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. மீனவர் பிரிட்ஜோவின் உடலைப் பெற்றுக் கொண்டு அடக்கமும் செய்யப்பட்டது.
ஆனால் பிரிட்ஜோ படுகொலையைக் கண்டித்து நாகப்பட்டினம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் இன்றும் 5-வது நாளாக நீடித்தது.
இன்றைய போராட்டத்தின் போது 9 பெண்கள் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். படகு உரிமையாளர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.